முடிவே இல்லாமல் தொடரும் படுகொலைகள்... உமா மகேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் ஆவேசம்
நெல்லை : திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேரை படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நெல்லையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "1996 இல் நான் சென்னை மேயராக இருந்த போது உமா மகேஸ்வரி நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக பதவியேற்று மக்களுக்கு பல சிறப்பான பணிகளை செய்தவர்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு
அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவை செய்தவர்.கலைஞர் பாராட்டும் வகையில் ஒரு முறை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பாவேந்தர் விருது வழங்கி பாராட்டப் பெற்றவர்.
உரிய தண்டனை
நினைத்து பார்க்க முடியாத சூழலில் நேற்று மூவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த ஆட்சியில் தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது, இதற்கு முடிவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது .படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.
இருவரை பிடித்து விசாரணை
இதனிடையே பரப்பரப்பை ஏற்ப்படுத்திய நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கொலை நடந்த போது அவரது வீட்டின் அருகே இருந்த சில வீடுகளின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வண்ணம் சுற்றிய இருவரை பிடித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
விரைவில் குற்றவாளிகள் கைது
மேலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஏற்கனவே 3 பெண்கள் உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதில் உள்ளூரை சேர்ந்தவர்கள் சிலரும் அடங்குவர்.மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என கூறப்படுகிறது.