நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’
திருநெல்வேலி: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திருநெல்வேலி தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படிவில்லை. தனால் நயினார் நாகேந்திரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு மாறலாம் என கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் அங்கு களமிறங்கினால் அவரை வீழ்த்த ஸ்டாலின் இறக்கும் 'பெரிய தலை' குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். இவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.

இந்நிலையில் தான் தொகுதி பங்கீட்டில் பாஜகவுக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் நயினார் நாகேந்திரன் இந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் கூட்டணியில் சாத்தூர் தொகுதி பாஜகவிடம் வழங்கப்பட்டுள்ளது.
சாத்தூரில் களமிறங்கும் நயினார்
இதுபற்றி நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், ''6 மாதங்களுக்கு முன்பே நயினார் நாகேந்திரன் தொகுதி மாற முடிவு செய்தார். இதனால் சாத்தூர் தொகுதியில் களப்பணியை தொடங்கினார். அங்கு 23 சதவீதம் என்ற அளவுக்கு தேவர் சமுதாய மக்களின் ஓட்டு உள்ளது. நயினார் நாகேந்திரனும் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
இதனால் அங்கு எளிதில் வெல்லலாம் என்று நயினார் நாகேந்திரன் நினைத்துள்ளார்'' என்று கூறியுள்ளனர். இதன்மூலம் ஏறக்குறைய நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் களமிறங்குவது உறுதியாகிவிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே இன்னும் வரவேண்டிய நிலை உள்ளது.
ஸ்டாலின் இறக்கும் 'பெரிய தலை'
இந்நிலையில் தான் நயினார் நாகேந்திரனை வீழ்த்த முதல்வர் ஸ்டாலின் ரெடியாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரனை வீழ்த்தி விட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காய் நகர்த்தி கட்சியினரை முடுக்கிவிட்ட நிலையில் இப்போது சாத்தூரில் இறங்கினாலும் அவரை தோற்கடிக்க பெரிய தலை ஒருவரை களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் களமிறங்கினால் அவரை வீழ்த்தும் பொறுப்பை தற்போதைய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம், ஸ்டாலின் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 79 வயது நிரம்பிய வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அரசியலில் நெடிய அனுபவம் கொண்டவர்.
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் பின்னணி
இவர் தற்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். சாத்தூர் தொகுதி என்பது கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் பழைய தொகுதியாகும். இவர் முதலில் அதிமுகவில் இருந்தார். அந்த சமயத்தில் 1977, 19801984, 1991, 1996 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இதில் 1996 தேர்தலில் மட்டும் தோல்வியடைந்த அவர் பிற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
பிறகு திமுகவில் சேர்ந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் 2001, 2006 தேர்தல்களில் சாத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு தான் அவர் அருப்புக்கோட்டை தொகுதிக்கு மாறினார். இதனால் சாத்தூர் தொகுதியின் களநிலவரம் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு நன்கு தெரியும்.
அமைச்சர் அல்லது அமைச்சர் மகன் போட்டி?
இதனால் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் களமிறங்கினால் அவரை வீழ்த்தும் பொறுப்பை ஸ்டாலின், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேகேஎஸ்எஸ்ஆர் தனது மகன் ரமேஷ்க்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட் சீட் கேட்டு வருகிறார். ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் நயினார் நாகேந்திரனை எதிர்த்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அல்லது அவரது மகன் ரமேஷ் கூட களமிறங்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications