பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடைத்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் உடல் நல்லடக்கம்
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கின் உடல் இன்று காலை அவருடைய சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் "எனது வீட்டை சில மர்மநபர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என 4 பக்கங்கள் கொண்ட புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இரு தினங்களாக தந்தையை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கரைசுத்துபுதூர் உவரியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் எழுதிய கடிதத்தில் ரூபி மனோகரன், கே.வி. தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக சென்னையிலிருந்து நெல்லை சென்றுள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது இரங்கல் செய்தியில், "பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராஜர் மீது அளப்பரிய பற்று கொண்டு இளமை பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தமிழக காங்கிரஸ் தலைமை அறிவிக்கின்ற கட்சிப் பணிகளை எல்லாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நிறைவேற்றி இயக்கப் பணியாற்றி வந்த இவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கரைச்சுத்துபுதூர் கிராமத்தில் வைக்கப்பட்ட நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து உடனே ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நல்லடக்கம் செய்யும் போது பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீஸார் கரைச்சுத்துபுதூர் கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications