பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திமுக பிரமுகர் கைது.. தப்ப முயன்றபோது தனிப்படை போலீசார் அதிரடி!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஜெகன் பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் பிரபு கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் இருந்து தப்ப முயன்ற பிரபுவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன். இவர் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஜெகன் இரவு நேரத்தில் தனது பைக்கில் பாளையங்கோட்டையில் இருந்து மூளிக்குளம் அருகே உள்ள சுடலை மாட சுவாமி கோவில் அருகே உள்ள வாய்க்கால் பாலத்தில் தனது நண்பர்களை பார்த்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 3 பைக்குகளில் வந்த 6 பேர் திடீரென ஜெகனை சுற்றி வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியது. இதில் ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்தனர்.
மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு என்பவர் தான் இந்த கொலைக்கு மூல காரணம் என்றும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஜெகன் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பாஜக நிர்வாகி ஜெகன் பாண்டியனின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த பாஜக பிரமுகர் கொலை வழக்கில் அனிஸ், பாஸ்கர், சந்துரு, அஜித், விக்கி, வசந்த் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் திமுக பிரமுகர் பிரபு உள்ளிட்ட 5 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
3 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் தனிப்படை போலீசார், நெல்லை மாவட்டத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற மூளிக்குளம் பிரபுவை கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications