நெல்லையில் திருட போன தங்க நகை.. வீடு தேடி வந்த இன்ப அதிர்ச்சி.. திருடன் தந்த ட்விஸ்ட்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரத்தைச் சேர்ந்த ரீகன் என்பவர் செங்கல்பட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நகைகள் மாயமாகியிருந்தது. இதுபற்றி ரீகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதையறிந்த கொள்ளையன் போலீசில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் திருடிய வீட்டிலேயே நகையை வைத்துவிட்டு சென்ற சம்பவம் நடந்திருக்கிறது.
தங்கத்தின் மதிப்பு இன்றைக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 2000களில் 10 ஆயிரம் சம்பளம் வாங்குவோர் , ஒரு மாத சம்பளதில் 2 பவுன் நகையை தராளமாக வாங்கிவிட முடியும். இன்றைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர்கள் ஒரு பவுன் தங்க நகை தான் வாங்க முடியும். அந்த அளவிற்கு தங்கத்தின் மதிப்பு ஏறிவிட்டது. இதனால் பல பகுதிகளில் தங்க நகைகள் திருடப்படுகிறது.

நகைகள் விற்பனை
நகைகளை திருடும் சிலர், அதனை எடுத்து உடனே விற்று பணமாக்க விரும்புவார்கள். அப்படி நகையை விற்கும் போது சில நேரங்களில் சிக்கல் வருகிறது என்பதால், அதனை அடமானம் கூட வைத்து பணம் பெறுவார்கள்.. இன்னும் சிலர் தங்க நகையைதிருடிய உடன் உருக்கி கடைகளுக்கு தந்துவிடுவார்கள்.. இப்படி பலவிதமாக தங்க நகைகள் திருடப்படுகிறது.
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரத்தைச் சேர்ந்த 40 வயதாகும் ரீகன் என்பவர் செங்கல்பட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷீலாவுக்கு 35 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த குழந்தைகளுக்கு ஊரில் வைத்து ஆலயத்தில் நற்கருணை எடுப்பதற்காக சமீபத்தில் சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளார். மேலும் அவர்களது வீட்டில் கட்டுமான பணியும் நடந்து வருகிறது. இதனால் வீட்டில் வேலையாட்கள் வந்து சென்றபடி இருந்தார்கள்.
தங்க நகை திருட்டு
நேற்று முன்தினம் ஷீலா பீரோவை திறந்து பார்க்கும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் தங்கநகை மாயமானது கண்டு திடுக்கிட்டார். நகையை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், குடும்பத்தினர், வீட்டின் கட்டுமான பணிக்கு வந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
தங்க நகை திரும்ப கிடைத்தது
இந்தநிலையில் நேற்று காலை ஷீலா எழுந்து பார்த்தபோது திருடுபோனதாக கூறப்பட்ட 6.5 பவுன் நகை வீட்டு மேஜையில் இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஷீலா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சிக்கிவிடுவோம் என்ற பயம்
இதில், தங்க நகையை திருடிய கொள்ளையன் தான் போலீசில் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் அதே வீட்டிற்கு வந்து நகையை வைத்துவிட்டு சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருந்தபோதும், நகையை திருடிச்சென்றது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications