வயிற்றில் இரும்பு தகடு! கட்டப்பட்ட கால்கள்! கொலையான ஜெயக்குமார் தனசிங்! உடற்கூராய்வில் பகீர்
நெல்லை: நெல்லை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் (60) வயிற்றுக்கு மேல் பகுதியில் இரும்பு தகடு இருந்ததும் கால்கள் கட்டப்பட்டிருந்ததும் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் "எனது வீட்டை சில மர்மநபர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என 4 பக்கங்கள் கொண்ட புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இரு தினங்களாக தந்தையை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கரைசுத்துபுதூர் உவரியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் எழுதிய கடிதத்தில் ரூபி மனோகரன், கே.வி. தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக சென்னையிலிருந்து நெல்லை சென்றுள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவருடைய உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: ஜெயக்குமார் தன்சிங்கின் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. இவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயக்குமார் இறப்பு விவகாரத்தில் கட்சி ரீதியாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமாரின் உடற்கூராய்வில் அவருடைய வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும் கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது கொலையா, தற்கொலையா என சந்தேகம் எழுந்தது. ஆனால் உடற்கூராய்வு தகவல் மூலம் அது கொலை என உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications