கள்ள ஓட்டு, தர்ணா, 49பி.. விஜய்யின் சர்கார் பாணியில்..போராடி டெண்டர் ஓட்டுபோட்ட இசக்கியம்மாள் பாட்டி
திருநெல்வேலி: பணகுடியை சேர்ந்த ஒருவரது வாக்கை ஏற்கனவே மற்றொருவர் செலுத்திவிட்டதால், அவருக்கு விஜய்யின் 'சர்கார்' பட பாணியில் 49பி படிவத்தைப் பயன்படுத்தி டெண்டர் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக நேற்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாகத் தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளன.

விஜயின் சைக்கிள் சரவெடி
நேற்று வாக்குப்பதிவு தொடங்கிய போது பல்வேறு பிரபலங்களும் காலை முதலே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறிப்பிடும் வகையிலேயே அவர் சைக்கிளில் வந்ததாக இணையத்தில் செய்திகள் பரவின.

நெல்லை இசக்கியம்மாள்
இந்நிலையில். நெல்லை மாவட்டம் பணகுடியில் இசக்கியம்மாள் என்பவர் சர்கார் திரைப்படத்தில் வருவதைப் போல 49பி படிவத்தைப் பயன்படுத்தி வாக்களித்தார். நேற்று அவர் வழக்கம் போல தனது வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றுள்ளார். அங்கு வாக்குச் சாவடியில் இருந்த அதிகாரி, இசக்கியம்மாளின் வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

Array
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இசக்கியம்மாள், நான் இப்போது தான் வாக்களிக்க வருகிறேன். எப்படி எனது வாக்கை மற்றொருவர் போட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தன்னை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தர்ணாவையும் மேற்கொண்டார். இதையடுத்து 49பி படிவத்தைப் பயன்படுத்தி அவரை டெண்டர் முறையில் வாக்களிக்கத் தேர்தல் மைய அதிகாரிகள் அனுமதித்தனர்.

விஜய்யின் சர்கார்
அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரது வாக்கையும் ஏற்கனவே வேறு ஒருவர் செலுத்திட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த நபரையும் 49 பி படிவம் மூலம் டெண்டர் ஓட்டு அளிக்கப்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான சர்கார் படத்தில் ஒருவரது வாக்கு ஏற்கனவே போலியாகச் செலுத்தப்பட்டிருந்தால், 49பி படிவம் மூலம் டெண்டர் முறையை பயன்படுத்தி அவரை வாக்களிக்க அனுமதிக்கலாம் என்பது குறித்து விளக்கப்பட்டிருந்தது.

கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்
பெரும்பாலான இடங்களில் டெண்டர் முறையில் வாக்குகள் பதிவாகாது. அப்படியே பதிவானாலும் அது மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த முறையில் பதிவாகும் ஓட்டுகள் வாக்கு எண்ணிக்கையின்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி- தோல்வி தீர்மானிக்கப்படும்போது மட்டுமே டெண்டர் வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications