நெல்லை புறக்காவல் நிலையம் முன்பு இளைஞர் வெட்டிக் கொலை! கதறலுடன் தாய் அளித்த பரபரப்பு பேட்டி
நெல்லை: நெல்லையில் புறக்காவல் நிலையம் முன்பு படுத்திருந்த இளைஞரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் அருகே உள்ள கருப்பந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. இவருக்கு 2 மகள் உள்ளனர். அது போல் 27 வயதாகும் சந்தியாகு என்ற மகனும் இருந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை கருப்பந்துறை புறக்காவல் நிலைய வாசலில் சந்தியாகு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் சந்தியாகுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தியாகு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் தகவல் அறிந்து புறக்காவல் நிலையம் முன் திரண்டனர். தகவலறிந்த துணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், ரமேஷ் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
போலீஸார் சடலத்தை எடுக்க முயன்ற போது சந்தியாகுவின் உறவினர்கள் காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸாரின் சந்தியாகுவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள், மேலும் சந்தியாகுவை வெட்ட பயன்படுத்திய அரிவாளில் ரேகையை சேகரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சந்தியாகுவின் தாய் கூறியிருக்கையில் எங்கள் ஊரில் படிக்கும் பிள்ளைகளுக்கு எல்லாம் கஞ்சா கொடுக்கிறார்கள். என் பேரனுக்கும் கஞ்சா கொடுத்து அவனை பள்ளி பக்கமே போகவிடாமல் தடுக்கிறார்கள். எங்கள் ஊரில் 10 பிள்ளைகள் படிக்காமல் இருக்கிறார்கள். இதை என் மகன் எதிர்த்ததால்தான் அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications