நெல்லை ஜாகீர் உசேன் கொலை.. தேடப்பட்ட முகமது தெளபிக் கைது.. துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீஸ்!
நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ளனர். ரெட்டியார்பட்டியில் பதுங்கியிருந்த அவரை பிடிக்க போலீசார் சுற்றி வளைத்த போது, அவர் அரிவாளால் தாக்க முயற்சித்துள்ளார். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ளனர்.
நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (57). காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்து வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற அவர், தற்போது நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார்.

ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், நேற்று அதிகாலை தைக்காவில் தொழுகையை முடித்துவிட்டு, அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து வந்திருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. வக்பு வாரியத்திற்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடம் இருந்து சட்ட போராட்டம் நடத்திய ஜாகிர் உசேன், அந்த நிலத்தை ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு கொடுத்தார்.
இதனால் அவரை எதிர் தரப்பு கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இந்த விவகாரம் மாநில அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஜாகீர் உசேன் குடும்பத்தினர் அவரின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இருவர் போலீசாரிடம் சரணடைந்தனர். இருப்பினும் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அப்படியில்லை என்றால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கூறினர்.
அதேபோல் ஜாகீர் உசேன் கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் முகமது தெளபிக் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் சென்ற போது, போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications