குமரி, நெல்லை கூடங்குளம் கடலோர பகுதிகளில் நிலநடுக்கமா? பரவிய தகவல்.. ஆட்சியர் விளக்கம்
நெல்லை: நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளான கூடங்குளம் கூத்தங்குழி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் நெல்லை ஆட்சியர் பா கார்த்திகேயன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. குறிப்பாக விவேகானந்தர் பாறை உள்ளிட்ட பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதேபோல் நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் இன்று மாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது.

கூடங்குளத்தில் அணு உலை உள்ள நிலை உள்ள நிலையில், அங்கு நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவலால் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் பா கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் பா. கார்த்திகேயன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நெல்லையின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை. நெல்லையில் கடந்த ஒரு மாதத்தில் எந்த நில அதிர்வும் பதிவாகவில்லை.
நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறினார். இதற்கிடையே, கூடங்குளம் அருகே உள்ள இருக்கன் துறை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications