அடி மேல் அடி..இடியாப்ப சிக்கலில் இருட்டுக் கடை! கடை யாருக்கு சொந்தம்? வரிந்து கட்டி வரும் வாரிசுகள்!
திருநெல்வேலி: உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமம் யாருக்கு என்பது குறித்து சர்ச்சை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே கவிதா என்பவர் கடைக்கு உரிமை கொண்டாடி வரும் நிலையில் கடந்த வாரம் நயன் சிங் என்பவர் உயில்படி தனக்குத் தான் இந்த கடை சொந்தம் என அறிக்கை விட்டார். இதற்கிடையே கவிதா மற்றும் நயன் சிங்குக்கு கடையில் உரிமை இல்லை எனவும் தான் கடையின் உரிமையாளர் என பொது அறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறார் இருட்டுக்கடை நிறுவனத்தின் நிறுவனரான கிருஷ்ணசிங்கின் சகோதரரின் பேரனான பிரேம் ஆனந்த் சிங்.
திருநெல்வேலி அல்வா என்ற பெயர் வரக் காரணமே நெல்லை இருட்டுக்கடை அல்வா தான். பல ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண சிங் உருவாக்கிய பிரேம விலாஸ் இருட்டுக்கடை என பெயர் பெற்றது. ஒரே ஒரு விளக்கு வெளிச்சத்தில் அல்வா விற்பனை செய்து வந்ததால் அந்த பெயர் வந்தது.
உலக அளவில் பெயர் பெற்ற இந்த நிறுவனத்திற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடையை உருவாக்கிய கிருஷ்ண சிங் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகனான பிஜிலி சிங் அதற்குப் பிறகு பிஜிலி சிங்கின் மனைவி சுலக்சனா பாய் ஆகியோர் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவர்களது மறைவுக்கு பிறகு இருட்டுக்கடை அல்வா நிறுவனத்தின் நிர்வாகத்தை ஹரி சிங் -- கவிதா ஆகியோர் நிர்வாகித்து வந்தனர். கவிதாவின் மகள் பலராம் சிங் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது தனிக் கதை. இந்த நிலையில் 1999 ஆம் ஆண்டு எழுதிய உயில்படி கடையின் உரிமை தனக்குத்தான் சொந்தம் என கடந்த வாரம் நயன் சிங் என்பவர் கூறினார்.
சுலோக்ஷனா பாய் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மரணம் அடைந்த நிலையில் நயன் சிங்கின் உடன் பிறந்த சகோதரி கவிதா இருட்டுக்கடை அல்வா கடைக்கு உரிமம் கொண்டாடி வருகிறார். அந்த கடையும் தனக்குத் தான் சொந்தம் என கூறி வருகிறார். உயில் படி தான் அந்த கடைக்கு வாரிசு எனவே கடை குறித்து யாராவது உரிமை கூறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடியாக அறிக்கை விட்டார் நயன் சிங். இந்த நிலையில் இருட்டுக்கடை விவகாரத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.
அந்த கடையின் உரிமை தனக்குத் தான் சொந்தம் என களம் இறங்கி இருக்கிறார் இருட்டுக்கடையை உருவாக்கிய கிருஷ்ண சிங்கின் சகோதரர் மகன் வழி பேரனான பிரேம் ஆனந்த் சிங். கடையின் உரிமம் தனக்குத் தான் சொந்தம் எனவும் கடையின் வரவு செலவுகள் மற்றும் தவறுகள் குறித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும், இருட்டுக்கடை தொடர்பாக கவிதா சிங் மற்றும் நயன் சிங்கிடம் யாரும் தொடர்பு கொள்ள கூடாது எனவும், அவ்வாறு ஏதாவது வரவு செலவு கணக்கு வழக்குகள் இருந்தால் தன்னை கட்டுப்படுத்தாது என பிரேம் ஆனந்த் சிங் அதிரடியாக பொது அறிவிப்பு ஒன்றை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளார். இதனால் இந்த சொத்து பிரச்சனை முக்கோண சொத்து பிரச்சனையாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications