சிறுபான்மை மக்களை உயிருடன் எரிப்பவர்களை தீயசக்தி என சொல்ல முடியுமா விஜய் – கொதித்த பீட்டர் அல்போன்ஸ்
திருநெல்வேலி: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் இப்போதே அனல்பறக்க தொடங்கிவிட்டது. நடிகர் விஜய் திமுக எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தியுள்ளார். திமுகவின் முக்கிய வாக்கு வங்கியான சிறுபான்மை சமுதாய மக்களின் வாக்குகளை பிரிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை மக்களை உயிருடன் எரிப்பவர்களை தீயசக்தி என்று சொல்ல முடியுமா என விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். சட்டமன்ற தேர்தலில் இந்தமுறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தீயசக்தி விமர்சனம்
தவெக தலைவர் விஜய் கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது திமுகவை அவர் தீயசக்தி என்று குறிப்பிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியை கையில் எடுத்து விஜய் திமுகவை எதிர்க்க தொடங்கியுள்ளார். இது அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் சென்றுள்ளார். அங்கு அவர் அனைத்து கிறிஸ்துவ அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும் மாநில சிறுபான்மை நல வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார்.
அதிகாரம் கேட்கவில்லை
ஸ்டாலின் முன்னிலையில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "ஜனநாயகம் பெரும்பான்மையாக செயல்படுகிறது. அந்த பெரும்பான்மை எங்களிடம் இல்லாத காரணத்தால் நாங்கள் ஊனமுற்றவர்களாக இருக்கிறோம். அரசியல் ரீதியாக நாங்கள் மாற்றுத்திறனாளிகள். சிறுபான்மை மக்கள் ஆட்சி கட்டிலில் அமர ஆசைப்படவில்லை. அதிகாரம் கேட்கவில்லை.
நாடாளும் வாய்ப்பை தாருங்கள் என்று கேட்கவில்லை. நாங்களும், எங்கள் பிள்ளைகளும், குடும்பத்தினரும் குடிமகன்களாக வாழும் உரிமை வாழ்வை மட்டுமே கேட்கிறோம். அதற்கான வாய்ப்பை உங்களால் மட்டுமே (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) உறுதி செய்ய முடியும். உங்களை தீயசக்தி என்று சொல்வதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்.
தைரியம் இருக்கா விஜய்
உங்கள் தலைமையில் இருக்கிற சக்தியை தீயசக்தி என்று கூறினால், இந்த தேசத்தில் சிறுபான்மை மக்களை உயிருடன் எரிப்பவர்களை தீயசக்தி என்று சொல்ல அவருக்கு (விஜய்) தைரியம் இருக்கிறதா. உங்கள் கண்ணீரை மனதில் வைத்து பூட்டி, தூக்கி எறிந்தவர்களை அவர் தீயசக்தி என்று சொல்லுவாரா. மணிப்பூரிலேயே நிர்வாணமாக அழைத்து வந்தவர்களை அவர் தீயசக்தி என்று சொல்வாரா.
எங்கள் தேவாலயங்களை எரித்தவர்களை, எங்களை தோலுரித்து கொன்றவர்களை, பட்டியலின மக்களை, பழங்குடி மக்களை வாழ முடியாமல் சாலையில் தள்ளியவர்களை அவர் தீயசக்தி என்று சொல்வாரா. நீங்கள் எங்களோடு நடந்தவர்கள், நாங்கள் வாழ்வதற்காக மகிழ்ந்தவர்கள். நாங்கள் கேட்கும்போதெல்லாம் எங்களுடன் வந்தவர்கள்.
ஸ்டாலினால் பாதுகாப்பு
எங்களோட சரி சமமாக அமர்ந்தவர்கள். எங்கள் பேராயர்களை அணைத்து கொண்டவர்கள், எங்கள் சகோதரர்களை கண்ணீர்களை துடைத்தவர்கள். எங்கள் தலைவர் கலைஞர் எங்களை மனமார, உளமார நேசித்தார். நீங்களும், ராகுல் காந்தியும் இருக்கிற வரை தான் அகில இந்திய அரசியலில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்." என்றார்.












Click it and Unblock the Notifications