மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தலாமா.. மனசாட்சி இல்லையா.. வைகோ ஆவேசம்
நெல்லை: நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக, தமிழறிஞர் நெல்லை கண்ணன், நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைகோ, இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மேலப்பாளையத்தில் பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அவர் எப்போதும் நகைச்சுவையுடன் பேசக்கூடியவர். அவர் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தான் பேசினார். ஆனால் அதை பெரிதுபடுத்திவிட்டனர். எனவே நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவினர் மனசாட்சி இல்லாதவர்கள் என்பதை காட்டுகிறது. இதன் மூலம் இங்கு பாசிச ஆட்சி நடைபெறுவது தெரிகிறது.
இந்தியாவில் ஒற்றுமை, பன்முக தன்மையை சிதைத்து இஸ்லாமியர்களை வெளியேற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது. பொது சிவில் சட்டத்தை இவர்கள் நிறைவேற்ற நினைக்கிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது கோலம் வடிவில் மாறியுள்ளது. கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்கின்றனர். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நைனார் நாகேந்திரன் வைரமுத்து தலையை வெட்ட வேண்டும் என்று பேசியதற்காக ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை.
வைரமுத்துவின் தலை உருண்டிருக்க வேண்டாமா என்று பேசியவர் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா. கல்லூரி வளாகத்திற்குள்ளிருந்து கல் வீசப்பட்டால் வெளியிலிருந்து நாங்கள் குண்டு வீசுவோம் என்றும் பேசியுள்ளார்.
தந்தை பெரியாரிலிருந்து தொடங்கி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை பலருக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய எச். ராஜா ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? எனவே உடனடியாக நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும்.
மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு:
நெல்லை கண்ணன் பேச்சில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக கைது செய்யும் போது அவரை சிலர் தாக்கியது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் உணர்வுகளை சீண்டிய எச். ராஜா, எஸ்.வி.சேகர், கல்யாணராமன் ஆகியோர் ஏன் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications