கலெக்டர் செய்தது தவறு.. மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்காக.. அதிரடியாக களம் இறங்கிய கிருஷ்ணசாமி
திருநெல்வேலி: மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என்று தனியார் நிறுவனம் தான் கட்டாயப்படுத்தி உள்ளது என்று கூறியுள்ள புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இந்த விவகாரத்தில் கலெக்டரின் செயலை கண்டித்துள்ளார். அதேநேரம் போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக வருகிற 6-ந் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கிருஷ்ணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாஞ்சோலையில் 16 மணி நேர வேலை, குடியிருப்புகளில் பழுது, குறைவான கூலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்நிறுத்தி கடந்த 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி போராட்டம் நடத்தியது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை பொறுத்தரை, அங்கு 6 தலைமுறையாக 1929-ம் ஆண்டு முதல் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கடந்த 15-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்று விட்டதாகவும் கூறியுள்ள தனியார் நிறுவனம், அவர்கள் ஆகஸ்ட் 7-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்ய உள்ளதாகவும் தவறான தகவலை கூறியிருக்கிறது.
மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என்று தனியார் நிறுவனம் தான் கட்டாயப்படுத்தி உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டரிடம் சென்றுள்ளார்கள். ஆனால் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினால் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக பார்க்க முடியாது. முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பாக இருக்க கூடியவர் கலெக்டர்தான். ஆனால் அவரே தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியது மிகவும் தவறு. ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்திருக்கிறார்கள். பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை பிரச்சனையாக்கி உள்ளார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் தொழிலார்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காத போது அவர்களிடம் தனித்தனியாக பேசி கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தனியார் நிறுவன மேலாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தேயிலை பறிக்கும் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. எந்த காரணத்தை கொண்டும் அவர்களை மலையில் இருந்து கீழே இறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாம். கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஆணைகளை தொழிலாளர் நலத்துறையினர் தலையிட்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தொழிலாளர்களை மலையில் இருந்து கீழே இறக்க கூடாது. அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 6-ந் தேதி (சனிக்கிழமை) திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications