குளிர்பானத்தில் மயக்க மருந்து.. நெல்லை சட்டக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பகீர்.. பேராசிரியருக்கு வலை
நெல்லை: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை, சட்டக்கல்லூரி பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுததி உள்ளது. அந்த சட்டக்கல்லூரி பேராசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆன்லைனில் பாடம் நடத்தி வந்ததன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், தனியாக பேருந்துக்காக நின்றிருந்த மாணவியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்று , மயக்க மருந்த கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து இந்த மோசமான செயலை பேராசிரியர் செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை, சாந்திநகர் போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாரதி (32). நெல்லை அரசு சட்டக்கல்லூரி தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைனில் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்தார். அப்படி பாடம் நடத்தும்போது தன்னிடம் மூன்றாம் ஆண்டு படிக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவியுடன் பழகி உள்ளார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து
.சில மாதங்களுக்கு முன் ஊருக்கு செல்வதற்காக மாணவி, நெல்லை பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த பேராசிரியர், ஊரில் விட்டு விடுவதாக கூறி ஏற்றிச் சென்றிருக்கிறாராம். அவ்வழியில் மாணவிக்கு குளிர்பானத்தை வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளாராம்

பலமுறை பலாத்காரம்
அதை குடித்து மயங்கிய மாணவியை பாளை. ரெட்டியார்பட்டி மலையடிவாரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாராம் பேராசிரியர் ரமேஷ் பாரதி. அதன் பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆபாசமாக படமெடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த படத்தை காட்டி மிரட்டி ரமேஷ்பாரதி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக மாணவி தரப்பில் புகார் எழுந்துள்ளது.

ஆபாச படத்தை வெளியிடுவேன்
இப்போது முழு ஊரடங்கு என்பதால் மாணவி நாகர்கோவிலில் உள்ள தனது வீட்டில் இருந்திருக்கிறார். அவருக்கு ரமேஷ்பாரதி போன் செய்து தன்னுடன் வருமாறு கூறியிருக்கிறார். அதற்கு மாணவி மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர், 'நீ வரவில்லை என்றால் உனது ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன். கல்லூரியை விட்டு நீக்கி விடுவேன்' என்று கூறி மிரட்டினாராம்.

பாய்ந்தது வழக்கு
இதனால் பயந்து போன மாணவி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷ்னரிடம் அண்மையில் புகார் கொடுத்திருக்கிறார்.. இதையடுத்து நெல்லை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், பேராசிரியர் ரமேஷ்பாரதி மீது வழக்கு பதிவு செய்தனர். ரமேஷ்பாரதியை போலீசார் தற்போது தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications