'பரியேறும் பெருமாள்’ பாணியில் நெல்லையில் தலித் இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம்- 6 பேர் கைது!
நெல்லை: திருநெல்வேலியில் தலித் இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த ஜாதிவெறியர்கள் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் தலித் கதாநாயகனை கொடூரமாக தாக்கும் ஆதிக்க ஜாதி இளைஞர்கள், அந்த நாயகன் மீது சிறுநீர் கழித்து வன்மத்தை வெளிப்படுத்துவர். இந்த சம்பவம் தற்போது அப்படியே நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட ஜாதிவெறி கும்பல் அவர்களைக் கொடூரமாக தாக்கி உள்ளது. அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்திருக்கிறது. அத்துடன் ஓயவில்லை.
உச்சபோதையில் இருந்த அந்த கொடூர கும்பல், 2 இளைஞர்களிடமும் நீங்கள் எந்த ஜாதி என கேட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் தலித்துகள் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து உள்ளனர். இந்த இரு இளைஞர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தச்சநல்லூர் போலீசில் புகார் தரப்பட்டது. இதனடிப்படையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் ஜாதிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கை படுதீவிரமாக முன்னெடுக்கப்படும் நிலையில் இந்த கொடூரம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications