உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அறங்காவலருடன் மோதல்.. பூட்டு போட்ட அர்ச்சகர்கள்.. போலீஸ் குவிப்பு!
நெல்லை: உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் அர்ச்சகர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். சுயம்புலிங்க சுவாமி கோயில், பிரம்மசக்தி அம்மன் கோயில்களில் மேல் பூட்டு போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் சார்பில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி கிராமம் உள்ளது. கன்னியாகுமரி-திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த ஊரில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடலோரத்தில் அமைந்துள்ள சுயம்புலிங்க சுவாமி கோயிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம்.

இந்தக் கோயிலில் பரம்பரை அறங்காவலாராக ராதாகிருஷ்ணன் என்பவர் இருந்து வருகிறார். கோயிலில் உள்ள பூசாரிகள் தாங்கள் கோயிலின் பரம்பரை அர்ச்சர்கள் எனவும், எங்களை கோவில் பரம்பரை அறங்காவலர் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பரம்பரை அறங்காவலரின் ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு கோயில் அர்ச்சகர்கள் நடக்க வேண்டும், பரம்பரை அர்ச்சகர்கள் என்று கூற உரிமை கிடையாது, அவர்களை பூஜை செய்ய அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோயில் பூசாரிகள் இந்து அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை அமல்படுத்தும் படி ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சுப்புலட்சுமி, ஆலய நிலங்கள் தனி தாசில்தார் இந்திராகாந்தி மற்றும் போலீசார் உவரி கோயிலுக்கு வந்தனர்.
கோயில் அர்ச்சர்களை அழைத்து , நீதிமன்ற உத்தரவு குறித்து அதிகாரிகள் கூறினர். எனினும், இதை ஏற்க மறுத்த கோயில் அர்ச்சகர்கள் சுயம்புலிங்க சுவாமி, பிரம்ம சக்தி அம்மன் கோயில்களில் மேல் பூட்டு போட்டு பூட்டி போராட்டம் செய்தனர். கோயில் சார்பாக நியமிக்கப்பட்ட அர்ச்சர்களை பணி செய்ய விடாமலும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். நேற்று காலையில் தொடங்கிய அர்ச்சகர்கள் போராட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. இதனால், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications