உனக்கு 18 எனக்கு 200! வித்து பொழச்சிக்கோ.. டாஸ்மாக் செக்யூரிட்டிக்கு பங்கு கொடுத்த பலே கொள்ளையர்கள்!
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பணகுடியில் டாஸ்மாக்கில் திருடிவிட்டு பாதுகாப்புக்கு இருந்த செக்யூரிட்டியிடம் திருட்டில் பங்கு கொடுத்துவிட்டு சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விடலிவலையில் அரசு டாஸ்மாக் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் இந்த டாஸ்மாக் கடையில் திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, "நெல்லை மாவட்டத்தின் புறநகர் டாஸ்மாக் கடையில் இதுவும் ஒன்று. இந்த கடையில் செக்யூரிட்டியாக தியாகராஜன் என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே நாங்கள் முதலில் அவரிடம் விசாரித்தோம். பின்னர் கடையை பார்வையிட்டதில் உள்ளே கல்லா பெட்டியில் இருந்த பணம் எதுவும் திருடு போகவில்லை. ஆனால் 200லிருந்து 300 சாராய பாட்டில்கள் திருடுபோயுள்ளன. மற்ற பொருட்கள் எல்லாம் வைத்தது வைத்த இடத்திலேயே இருந்திருக்கிறது. ஆனால் திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த டாஸ்மாக் கடை அருகே எந்த சிசிடிவி கேமிராவும் இல்லை என்பதால் இதில் ஈடுபட்டவர்களை எங்களால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படி இருக்கையில்தான் டாஸ்மாக் செக்யூரிட்டி கொடுத்த தகவல்கள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது அதிகாலை 4 மணியளவில் 3 பேர் இரும்பு கம்பிகளுடன் வந்திருக்கிறார்கள். அவர்கள் கடையின் வாசலில் படுத்திருந்த செக்யூரிட்டி தியாகராஜனை எழுப்பியுள்ளனர். பின்னர் அவரை தனியாக அழைத்துக்கொண்டு போய் அவரிடம் இருந்த செல்போனை பறித்துள்ளனர். அவருடன் ஒருவர் மட்டும் இருக்கையில் மீதமிருந்த இருவரும் திரும்பி வந்து டாஸ்மாக் கதவை உடைத்திருக்கின்றனர். அரை மணி நேரம் கழித்து செக்யூரிட்டியை அழைத்து அவரிடம் ஒரு சாக்கு மூட்டையை கொடுத்திருக்கின்றனர்.
அவர்களிடம் இரண்டு சாக்கு மூட்டைகள் இருந்திருக்கிறது. அதாவது மொத்தமாக மூன்று சாக்கு மூட்டைகளில் 218 சாராய பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு சாக்குகளில் இருந்த 200 பாட்டில்கள் அவர்களுக்கும் ஒரு சிறிய சாக்கில் இருந்த 18 பாட்டில்களை டாஸ்மாக் செக்யூரிட்டிக்கும் கொடுத்திருக்கின்றனர். இந்த சரக்கை வைத்துக்கோண்டு ஒவ்வொரு பாட்டிலையும் ரூ.200க்கு விற்று பிழைத்துக்கொள் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். செக்யூரிட்டியிடம் இருந்த செல்போனை அவர்கள் பிடுங்கி சென்றதால் அவரால் உடனடியாக எங்களை அழைத்து தகவல் சொல்ல முடியவில்லை.

பொழுது விடிந்ததும் காலை வழக்கம் போல ஆள் நடமாட்டம் வந்த நிலையில் ஊர்காரர்களின் செல்போனை வாங்கி எங்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். தகவலின் பேரில் நாங்கள் ஆய்வு நடததியதில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து குற்றவாகிகளை தீவிரமாக தேடி வருகிறோம். சுற்றுவட்டார பகுதிகளில் யாரேனும் சாராய பாட்டில்களை பிளாக்கில் விற்பனை செய்கிறார்களா? என்று ஆய்வு செய்து வருகிறோம். அவர்களை கண்டுபிடித்துவிட்டால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம்.
அதேபோல டாஸ்மாக் செக்யூரிட்டி தியாகராஜனின் செல்போன் எண்ணையும் கண்காணித்து வருகிறோம். அவருடைய எண்ணிலிருந்து யாருக்கேனும் அழைப்பு சென்றிருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்" என போலீசார் கூறியுள்ளனர். டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்துவிட்டு அதில் கொஞ்சம் மது பாட்டில்களை செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ள சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பேசு பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications