மின் வயரில் கட்டப்பட்ட ஜெயக்குமாரின் கை, கால்கள்! விலகாத மர்மங்கள்! விசாரணை வளையத்தில் யார் யார்?
நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணத்தில் நிறைய மர்ம முடிச்சுகள் எப்போது அவிழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது தந்தை கே.பி. கருத்தையா, ராதாபுரம் ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார். இவரது வீட்டில் காமராஜர் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.

கட்சியில் செல்வாக்குடன் இருந்த ஜெயக்குமார், பெரிய பெரிய ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். நல்ல வசதியாகவே பணம், புகழுடன் இருந்தார். ஆனால் சில நாட்களாக அவர் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்ததாக தெரிகிறது.
நெல்லை எஸ்.பி.க்கு அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோரிடம் பணம் வாங்கியிருந்ததாகவும் சிலரிடம் பணம் கொடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
நாங்குநேரியில் ரூபி மனோகரனை எதிர்த்து ஜெயக்குமார் அரசியல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளை ஜெயக்குமார் நியமனம் செய்தார். இதில் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்து சத்தியமூர்த்தி பவனில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்போதைய மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. அப்போது ரூபி மனோகரன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தமிழக லோக்சபா தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இங்கு வேட்பாளராக ரூபி மனோகரன் அல்லது பீட்டர் அல்போன்ஸ் அறிவிக்கப்பட வாய்ப்பிருந்தது. ஆனால் ஜெயக்குமாரோ உள்ளூர் வேட்பாளர்களைத்தான் நிறுத்த வேண்டும் என்றார். இதனால் ராபர்ட் புரூஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன் பின்னர்தான் ஜெயக்குமார், தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக இயங்கினார். இந்த நிலையில்தான் ஜெயக்குமாரின் இறப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் 5 பக்க கடிதத்தை எழுதினார். அதில் தனது வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிடுவதாகவும் தனக்கு ஏதாவது நடந்தால் அது சிலரது சதியாக இருக்கும் என்றும் தெரிவித்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களின் பெயர்களையும் செல்போன் எண்களுடன் பட்டியலிட்டுள்ளார்.
மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பணம் கொடுக்கல்- வாங்கல் விவகாரங்களையும் குறிப்பிட்டுள்ளார். ரூபி மனோகரன் எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை ரூபி மனோகரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது போன்ற மரண வாக்குமூலம் அடங்கிய கடிதம் ஏதும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை என நெல்லை மாவட்ட காவல் துறையும் மறுத்துவிட்டது.
இந்த மர்ம மரணம் தொடர்பாக 7 தனிப்படைகளை அமைத்து எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு அவருடன் யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்தெல்லாம் தனிப்படையினர் விசாரித்து வருகிறார்கள்.
வீட்டிலிருந்து 350 அடி தொலைவில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவருடைய கைகளும் கால்களும் மின் வயர்களால் கட்டப்பட்டிருந்தது. இதனால் போலீஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து ஜெயக்குமார் தனசிங்கின் குடும்பத்தினரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். ஜெயக்குமார் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications