கொலையா? தற்கொலையா? ஜெயக்குமார் வழக்கில் நீடிக்கும் மர்மம்.. கேவி தங்கபாலுவிடம் தனிப்படை விசாரணை
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், பிணமாக மீட்கப்பட்ட வழக்கு தொடர்பாக போலீசார் 9 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேவி தங்கபாலுவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே பிணமாக மீட்கப்பட்டார். இது கொலை என்றும், தற்கொலை என்றும் தகவல் பரவி வரும் நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 30 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கேபிகே ஜெயக்குமார்: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார்.
கேபிகே ஜெயக்குமார் தனசிங், கடந்த 2 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் உவரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் ஜெயக்குமார் தனசிங் உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
கொலையா, தற்கொலையா?: இதையடுத்து ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்ய்பட்டாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது. பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 9 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
முன்னாள் காங் தலைவர் தங்கபாலு: ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள நபர்களிடம் நேரில் சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கட்சி நிர்வாகிகள் என 30 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேவி தங்கபாலுவிடம் இன்று போலீசார் விசாரனை நடத்தினர்.
45 நிமிடம்: நெல்லையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். களக்காடு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தங்கபாலுவிடம் தனி அறையில் விசாரணை நடத்தினார். சுமார் 45 நிமிடங்கள் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனித்தனியாக விசாரணை: முன்னதாக ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக அவரது மகன்களிடமும் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதேபோல், தடயவியல் நிபுணர்கள் மீண்டும் ஜெயக்குமார் தனசிங் பிணமாக கிடந்த தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, ஜெயக்குமார் தனசிங் வீட்டு பணியாளர்களிடமும் தனித்தனியாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதேபோல், ஜெயக்குமார் தனசிங்கின் செல்போன் மாயமாகி உள்ளதால் அதை தேடும் பணியில் மற்றொரு தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜெயக்குமார் தொலைபேசியில் கடைசியாக பேசிய நபர்கள் உள்ளிட்டோரிடமும், நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications