திருநெல்வேலிக்கே அல்வா.. "குண்டு பல்பு" இருட்டுக்கடை அல்வா ருசி.. கடைசிவரை தெரியாமல் போன சீக்ரெட்
நெல்லை: திருநெல்வேலியில் ஹரிசிங்கிடம் அல்வா சாப்பிடாத ஆட்களே கிடையாது... உலகத்துக்கே அல்வா தந்த ஹரிசிங் மரணம் தற்கொலையில் முடிந்துவிட்டது. கவிதாவுக்கு அல்வா ஃபார்முலாவை சொல்லித்தந்தாலும், பழைய ருசியில் பாதியைகூட தரமுடியவில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
TN Voice Now என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாண்டியன், "1940, 50 -களில், திருநெல்வேலியை சேர்ந்த சிங்கம்பட்டி ஜமீன் என்பவர், காசிக்கு ஒருமுறை போனார்.. சாமி கும்பிட்டுவிட்டு, அங்கிருந்த ஒரு கடையில் அல்வா வாங்கி சாப்பிட்டுள்ளார்.. அவருக்கு அல்வா மிகவும் பிடித்துவிட்டது.. இதை எப்படி செய்றீங்க? என்று இந்த ஜமீன் கேட்டுள்ளார்.

ஹரிசிங் அல்வா
அதற்கு அந்த கடையிலிருந்தவர், "இதற்கென தனி ஃபார்முலா உள்ளது, எனக்கு ஒரு ஆசான் சொல்லித் தந்துள்ளார்.. அதை யாருக்கும் சொல்லிக் கொடுப்பதில்லை" என்றார்.
உடனே இந்த ஜமீன், "எங்கள் ஊருக்கு வந்து, தாமிரபரணி ஆற்று நீரில் அல்வா செய்தால், இன்னும் ருசியாக இருக்கும்' என்று சொல்லி, கையோடு அந்த நபரை நெல்லைக்கு அழைத்து வந்துவிட்டார். அவரது பெயர்தான் ஹரிசிங். ராஜஸ்தானை சேர்ந்தவர்... 1940களில் ஆரம்பிக்கப்பட்ட கடைதான், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா. அந்த கடையில் மாலை 6 மணிக்கு ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும் தொங்கும். மற்றபடி கடை முழுவதும் இருட்டாகவே இருக்கும்.
இருட்டுக்கடை அல்வா
சரியாக மாலை 6 மணிக்கு கடை திறக்கப்படும், 8 மணிக்கெல்லாம் கடை மூடப்பட்டுவிடும். அதாவது 2 மணி நேரத்தில் விற்பனை முடிந்துவிடும்.. காரணம், 200 கிலோ அளவுக்கு செய்தால் மட்டுமே அந்த ருசியை தருமாம். முதலில் 20 கிலோ தயாரித்து, அதற்கு பிறகுதான் மெல்ல மெல்ல விற்பனை அளவை அதிகரித்துள்ளார்.
இரவில் 2 மணி நேரம் வியாபாரம் என்றால், பகல் முழுவதும் அல்வா செய்யப்படும்.. தாமிரபரணியின் தண்ணீரில் மட்டும்தான், அல்வாவின் ருசி கிடைக்கும் என்று அடிக்கடி சொல்வார் ஹரிசிங்.
500 கிலோ வரை விற்பனை
இந்த ஹரிசிங்குக்கு குழந்தைகள் கிடையாது. அப்போது இதே திருநெல்வேலியில் வாழையடி லாலாக்கடை என்ற பெயரில் அல்வா கடை ஒன்று இயங்கி வந்துள்ளது.. இவர்களது மகள்தான் கவிதா.. இந்த கவிதாவைதான் ஹரிசிங் எடுத்து வளர்த்தார்.. அப்போதுமுதல் கவிதாசிங் என்று அவரது பெயர் மாறியது.
மரணமடைவதற்கு முன்புவரை ஹரிசிங், ஒருநாளைக்கு 500 கிலோ வரை விற்பனை செய்தார்.. 1 கிலோ 400 ரூபாய்.. அப்படியானால், ஒருநாளைக்கு 20 ஆயிரம் வியாபாரம் ஆகும்.
அல்வா செய்யும் ஃபார்முலாவை, தன்னுடைய வளர்ப்பு மகள் கவிதாவுக்கு ஹரிசிங் கற்று தந்தார்.. ஆனால், முழுமையாக சொல்லித்தரவில்லை.. எப்போதுமே, 99 சதவீதம் சொல்லி தந்தாலும் 1 சதவீதம் மட்டும் கற்றுத்தர மாட்டார்கள்..
மகளுக்கு அல்வா செய்யும் பக்குவத்தை கற்றுத்தந்த ஹரிசிங், "உன்னுடைய வாரிசு தவிர வேறு யாருக்கும் இருட்டுக்கடை அல்வா ஃபார்முலாவை சொல்லித்தர கூடாது" என்று கவிதாவிடம் ஹரிசிங் சத்தியம் வாங்கி கொண்டாராம்.
கொரோனா துயரம்
இந்நிலையில், ஹரிசிங் கொரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், கொரோனா தங்களுக்கும் வந்துவிடும் என்று நினைத்து, யாருமே அவரை சென்று மருத்துவமனையில் பார்க்கவில்லை. இந்த விரக்தியிலேயே தற்கொலை செய்து கொண்டார்..
திருநெல்வேலியில் ஹரிசிங்கிடம் அல்வா சாப்பிடாத ஆட்களே கிடையாது... உலகத்துக்கே அல்வா தந்த ஹரிசிங் மரணம் தற்கொலையில் முடிந்துவிட்டது. கவிதாவுக்கு அல்வா ஃபார்முலாவை சொல்லித் தந்தாலும், பழைய ருசியில் பாதியைகூட தரமுடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications