450 டன் எடை - 70 அடி உயரம்.. நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் திடீரென அறுந்த வடம்.. அபசகுனமா?
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 450 டன் எடை, 70 அடி உயரம் கொண்ட தமிழகத்தின் 3வது பெரிய தேரோட்டமாகும். இந்நிலையில் தான் இன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது திடீரென வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்று நெல்லையப்பர் - காந்தியமதியம்மாள் கோவில். இந்த கோவில் திருநெல்வேலி டவுனில் அமைந்துள்ளது.

சிவபெருமான் நடனமாடிய 5 முக்கிய திருத்தலங்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்தேரோட்டம் என்பது வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு தினமும் காலை, மாலை வேளைகளில் அம்பாள் வீதியுலா நடந்தது. இந்த நிலையில் தான் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
நெல்லையப்பர் கோவில் தேர் என்பது தமிழ்நாட்டின் 3வது பெரிய தேராகும். 450 டன் எடையுடன் 70 அடி உயரத்தில் இந்த தேர் இருக்கிறது. 518 ஆண்டுகளா தேரோட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். தேரோட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் திடீரென வடம் அறுந்தது.
இதனால் பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பக்தர்கள் சுதாரித்த நிலையில் தேர் நிறுத்தப்பட்டது. இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதன்பிறகு அறுந்த வடம் மாற்றப்பட்டு மீண்டும் தேரோட்டம் தொடங்கியது. பொதுவாக தேர்திருவிழாவுக்கு முன்பாக தேர் ஆய்வு செய்யப்படும்.

ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது சரிசெய்யப்பட்ட பிறகு தான் தேரோட்டம் நடத்தப்படும். அதேபோல் இந்த முறையும் தேர், தேரோட்டத்துக்கான வடம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் திடீரென்று வடம் அறுந்து உள்ளதால் இது அபசகுனமா? என பக்தர்கள் சிலர் நினைக்கின்றனர். இதனால் சில கோவில் நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
முன்னதாக இன்றைய தேர் திருவிழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications