டயாலிசிஸ் சிகிச்சை.. திடீரென உயிரிழந்த பள்ளி ஆசிரியை.. உறவினர்கள் ஆவேசம்.. நெல்லையில் பதற்றம்
நெல்லை: நெல்லையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை திடீரென உயிரிழந்த விவகாரத்தில், டாக்டர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி ஆசிரியையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாதாநகர் 2-வது தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அந்த பகுதியில் புத்தக கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி 32 வயதாகும் பத்மபிரியா தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது எதிர்பாராதவிதமாக பத்மபிரியா திடீரென்று உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் திரண்டு வந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பத்மபிரியா உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கதறி அழுதனர். இதையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ராஜேசுவரன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பத்மபிரியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், "டயாலிசிஸ் சிகிச்சைக்கு முன்பு வரை பத்மபிரியா, குடும்பத்தாரிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் டயாலிசிஸ் சிகிச்சை சரியாக அளிக்கப்படாமல், டாக்டர் மற்றும் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் தான் அவர் இறந்து விட்டார்" என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனைக்கு சென்று டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications