நெல்லையில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. காதல் விவகாரத்தில் மாணவியின் சகோதரர் வெறிச்செயல்!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 12ஆம் வகுப்பு படிக்கும் தன் சகோதரியுடன் பேசியதற்காக மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவரை 10ஆம் மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய அவலம் நேர்ந்துள்ளது. அரிவாளால் வெட்டப்பட்ட மாணவன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் ஐடி ஊழியரான கவின் செல்வகணேஷ். இவர் சென்னையில் சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித்திற்கு தெரிய வந்துள்ளது.

இதன்பின் சுர்ஜித், கவினிடம் பேசுவதற்காக அழைத்திருக்கிறார். இதனை நம்பி கவின் சென்ற நிலையில், சுர்ஜித் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். நெல்லை மாவட்டத்தில் நடந்த ஆணவ படுகொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதன்பின் சுர்ஜித் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த நிலையில், அவரின் தாய் மற்றும் தந்தை மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டார். அதேபோல் திமுக எம்பி கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதுமட்டுமல்லாமல் கவின் படுகொலைக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்று உறுதி கொடுத்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நெல்லையில் மீண்டும் ஆணவக் கொலை முயற்சி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், தன்னுடன் படிக்கும் மாணவியுடன் காதலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள்.
இந்த காதல் விவகாரம் மாணவியின் 10ஆம் வகுப்பு படிக்கும் சகோதருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியின் சகோதரர் தனது நண்பர்களை கூட்டிச் சென்று, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதனால் படுகாயமடைந்த மாணவர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உட்பட 5 சிறார்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் 5 பேரையும் கைது செய்த போலீசார், சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். நெல்லை கவின் ஆணவக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சிறார்கள் அரிவாளைக் கையில் எடுத்து கொலை முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications