”தமிழக பாஜக தலைவராக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பாக செயல்படுகிறார்” கேஎஸ் அழகிரி நக்கல்!
திருநெல்வேலி: தமிழகத்தில் பாஜகவை பொறுத்தவரை இரண்டு தலைவர்கள் செயல்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.
வரும் செப். 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். இது தொடர்பாக நெல்லை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், வரும் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கும் நடைபயணம் காங்கிரஸ் கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.. திருப்பூரில் கே எஸ் அழகிரி உருக்கமான பேச்சு! ஏன் என்னாச்சு?
கேஎஸ் அழகிரி பேச்சு
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் வியாபாரிகள் அவதி உள்ளிட்டவைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ராகுல் காந்தி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 நாட்கள்
இந்த பயணம் தமிழகத்தில் நான்கு நாட்கள் நடக்கிறது. ராகுல்காந்தியின் நடைப்பயணம் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பொருளாதாரம் 9 சதவிகிதம் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது.
குலாம் நபி ஆசாத் விலகல்
இன்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதாலும் அவர்களுக்கு பதவி இல்லை என்பதாலுமே குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் விலகிச் செல்கின்றனர். இது போன்று விலகிச் செல்வதால் காங்கிரஸ் கட்சி சுத்தமடைந்து வருவதாக நாங்கள் உணர்கிறோம். காங்கிரஸ் கட்சி 100 ஆண்டுகளில் மிகப்பெரிய எழுச்சி, வீழ்ச்சி, துரோகம் என பல்வேறு நிகழ்வுகளை சந்தித்துள்ளது. இது அதிகாரத்திற்காக தொடங்கிய கட்சி அல்ல. மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தரவும், சமூக நீதியை நிலைநாட்டவும் தொடங்கப்பட்ட இயக்கம்.
பாஜக மீது விமர்சனம்
தமிழகத்தில் பாஜகவை பொறுத்தவரை இரண்டு தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஒருவர் அண்ணாமலை, மற்றொருவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இதில் ஆர்.என்.ரவி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அண்ணாமலையை பொருத்தவரை விளம்பரத்திற்காக தினமும் தன்னை பற்றி செய்திகள் வர வேண்டும் என்பதற்காக முரணாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.