ரஜினி கூறிய அதிசயம் சினிமா பற்றியதாக இருக்கும்... கே.எஸ்.அழகிரி கிண்டல்
Recommended Video
நெல்லை: 2021-ல் அதிசயம் நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியது, சினிமா படத்தை பற்றி இருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கிண்டல் செய்துள்ளார்.
மேலும், அரசியல் வேறு, நடிப்பு வேறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ரசிகர் மன்றத்தை நம்பி அரசியலுக்கு வந்தால் அதிசயம் நடக்காது எனவும் அழகிரி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இந்தக் கருத்தை கூறினார்.

அரசியல் தலைவர்கள்
கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 2021-ல் அதிசயம் நடக்கும் என்ற கருத்தை கூறியிருந்தார். அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி சீமான் வரை தங்கள் விமர்சனத்தை பதிவு செய்து விட்டனர். ஆனால் அது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் கருத்தும் ஏதும் கூறவில்லை.

ரசிகர் மன்றம்
ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகள் செய்திருக்கலாம், ஆனால் அதை வைத்து மக்கள் ஓட்டு போடுவார்கள் என நம்பி ரஜினி அரசியலுக்கு வந்தால் அதிசயம் நடக்காது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி கூறிய அதிசயம் சினிமாவை பற்றியதாக இருக்கும் எனவும் கிண்டல் செய்துள்ளார்.

குதிரை பேரம்
மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்பது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அதிமுக அரசு நேர்மையுடன் செயல்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முன்வந்திருக்காது எனக் கூறினார்.

கண்டனம்
மறைமுகத் தேர்தல் முறைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாகவும், தேர்தலுக்கு பிறகு தலைவர், மேயர் பதவிகளுக்காக கவுன்சிலர்களை தூக்கிச் சென்று பேரம் பேசப்படும் நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications