திருநெல்வேலிக்கு ரயிலில் போறீங்களா.. தெற்கு ரயில்வே கொடுத்த முக்கியமான அப்டேட் .. நோட் பண்ணிக்கோங்க
திருநெல்வேலி: திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே இரட்டை பாதை அமைக்கும் பணி காரணமாக வரும் பிப்ரவரி 29-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. தற்போது மதுரை - திருநெல்வேலி இடையே இரட்டை பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி --நாகர்கோவில் இடையே உள்ள வழித்தடத்தில் மேலப்பாளையத்தில் இருந்து நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு, ஆரல்வாய்மொழி வரை 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் போக்குவரத்து நடந்து வருகிறது. மீதமுள்ள ஆரல்வாய்மொழி -நாகர்கோவில் இடையே 13 கிலோ மீட்டர், மேலப்பாளையம் -நெல்லை சந்திப்பு இடையே 3 கிலோ மீட்டர் தூரம் வரை பாதை அமைக்கும் பணி இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் மேலப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு நிலையத்திற்கு இரட்டை பாதை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. இதன் காரணமாக திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் ரயில்களும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரும் ரயிலும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சிமணியாச்சி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் செங்கோட்டை- திருநெல்வேலி பயணிகள் சேரன்மாதேவி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிப்பட்டு அதன்படியே நேற்று ரயில்கள் மாற்றப்பட்டது. இதேபோல் மறுமார்க்கத்தில் இருந்து திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் திருநெல்வேலி சந்திப்புக்கு பதிலாக சேரன்மாதேவியில் இருந்து புறப்பட்டது.
இதனிடையே இன்று தூத்துக்குடியில் இருந்து வாஞ்சிமணியாச்சி செல்லும் பயணிகள் வண்டி எண் (06847), மறுமார்க்கமாக வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி (06848), நெல்லை- திருச்செந்தூர் பயணிகள் (06673), திருச்செந்தூர்- நெல்லை பயணிகள் (06678), திருச்செந்தூர்- வாஞ்சிமணியாச்சி பயணிகள் (06680), வாஞ்சிமணியாச்சி- திருச்செந்தூர் பயணிகள் (06679) ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரஸ் திருச்செந்தூர்-வாஞ்சிமணியாச்சி வரை இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி வரும் பயணிகள் (06684, 06658) சேரன்மாதேவி வரை மட்டுமே இயக்கப்படும். சேரன்மாதேவி முதல் திருநெல்வேலி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில்கள் திருநெல்வேலிக்கு பதிலாக சேரன்மாதேவியில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் என்றும் இந்த மாற்றம் வரும் 29ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications