“டிக்கெட் எடுக்க மாட்டேன்”.. அரசு பேருந்தில் காவலர் வாக்குவாதம்.. அதிரடி காட்டிய போக்குவரத்துத்துறை!
நெல்லை: டிக்கெட் எடுக்க முடியாது எனக் கூறி காவலர் ஒருவர் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் இருந்து, காவலர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தின் நடத்துநர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது அந்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார்.

அரசு பேருந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எவரும் பணி நிமித்தமாக பயணிக்கும்போது டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான், எங்களுக்கும் டிக்கெட் கிடையாது எனக் கூறி டிக்கெட் எடுக்க மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்துநர், அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். வாரண்ட் இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறினார். எனினும், அவரது பேச்சை ஏற்க மறுத்த காவலர், “எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாங்க. போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் எங்கு வேண்டுமானாலும் கட்டணம் இன்றி பயணம் செய்கிறார்களே.. நாங்கும் அரசு ஊழியர்கள் தான். எனவே டிக்கெட் எடுக்க முடியாது” எனக் கூறி
வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, நடத்துநர், பேருந்தை ஒரு இடத்தில் நிறுத்தச் சொல்லி, டிக்கெட் எடுக்காவிட்டால் பேருந்தை எடுக்க முடியாது எனக் கூறினார். தலைமைக் காவலர் ஒருவர் வந்து, வாரண்ட் இல்லாமல் கட்டணம் இன்றி பயணிப்பது சரியல்ல, எனக் கூறி, காவலரை டிக்கெட் எடுக்குமாறு கூறினார்.
அப்போதும், அந்தக் காவலர், “எல்லா அரசு ஊழியர்களுக்கும் ஒரே ரூல்ஸ் தான். போக்குவரத்து துறை ஊழியர்களை மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கிறீர்கள், நான் டிக்கெட் எடுக்க மாட்டேன். பஸ்ஸை விட்டு இறங்க முடியாது” வாக்குவாதம் செய்தார்.
இதையடுத்து, பயணி ஒருவர் காவலரிடம் நானே உங்களுக்கும் டிக்கெட் எடுக்கிறேன், பிரச்சனையை விடுங்கள் எனக் கூற, காவலர் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. பயணிகள் தலையிட்டு சமாதானம் பேசிய நிலையில், பின்னர் அந்த காவலர் டிக்கெட் எடுப்பதாக கூறியதும் பேருந்து அங்கிருந்து கிளம்பியது.
அரசுப் பேருந்தில் காவலருக்கும், நடத்துநருக்கும் இடையே நடந்த இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. காவலர், அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.
வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரங்களிலும், காவலர்கள் டிக்கெட் எடுத்து தான் பயணிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும், அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை செயலர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications