முடிவுக்கு வரும் மாஞ்சோலை சாம்ராஜ்யம்.. பிறந்த மண்ணை விட்டு விடைபெறும் தொழிலாளர்கள்.. பணபலன் என்ன?
திருநெல்வேலி: முடிக்கு வருகிறது மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள்..100 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து விடைபெற போகிறார்கள். விருப்ப ஓய்வு பெறப்போகும் தொழிலாளர்கள் என்ன பணப்பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை சுமார் 95 ஆண்டுகளை கடந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.டி.சி.) என்னும் தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்நிறுவனத்திற்கான குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டு முடிய உள்ள நிலையில், அதற்கு மேல் அந்த நிறுவனம் குத்தகை காலத்தை நீடிக்கவில்லை. அங்கு பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்ட நோட்டீஸ் அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த நோட்டீஸ்படி, பிறந்த மண்ணை விட்டு விடைபெறும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு என்ன பணபலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

இதுதொடர்பாக பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிப்பின் படி, "மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிங்கம்பட்டி குரூப்பில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் குரூப்பின் வணிகத்தை நிலைதிருத்தமான முறையில் மேலாண்மை செய்வதற்கு உதவ பி.பி.டி.சி. லிமிடெட் வெளிப்படுத்தும் விருப்ப பணி ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.) மூலம் தொழிலாளர்கள் தங்களது தகுதியின் அடிப்படையில் பலன்களை பெற்றுக் கொள்ளும் வகையில் அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
என்ன பணப்பலன்கள்: தொழிலாளர்களுக்கு நிறுவனமானது சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய பலன்கள் மட்டுமல்லாது அதனோடு சேர்த்து கருணைத் தொகையும் மற்றும் 2023-2024-ம் நிதி ஆண்டிற்கான சட்டப்படியிலான போனஸ் தொகையும் (மிகை ஊதியம்) இணைத்து வழங்கப்படும். விருப்ப பணி ஓய்விற்கான அனைத்து வழிமுறைகளும் தீர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு, விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கும் அனைத்து தொழிலாளர்களும் அதில் கையொப்பமிட வேண்டும். தகுதி வரிகளின் அடிப்படையில் அதற்கான தலைப்பின்படி வழங்கப்படும் பணப்பலன்கள் பற்றிய விவரங்கள் விருப்ப ஓய்விற்கான திட்டத்தில் தெளிவாக கோடிட்டு காண்பிக்கப்பட்டு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரவர்கள் பெறுகின்ற பணப்பலன்களின் உண்மையான தொகையினை உறுதி செய்யும் வகையில் தனித்தனியாக கடிதங்கள் கொடுக்கப்படும்.
விருப்ப ஓய்வுக்கு கடைசி நாள்: மேலும் தீர்வு ஒப்பந்தத்தின் நகலும் மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்ப படிவமும் மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து எஸ்டேட் அலுவலகத்திலும், தேயிலை தொழிற்சாலை அலுவலகத்திலும் தொழிலாளர்களின் பார்வைக்காக வருகிற 14-ந் தேதி வரை வைக்கப்படும். தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அன்றே கடைசி நாள்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமுறை தலைமுறையாக தாங்கள் ரத்தத்தையும், வியர்வையும் சிந்தி உருவாக்கிய தேயிலை காடுகளை விட்டு வெளியேற போகிறார்கள் மாஞ்சோலை மக்கள். அவர்கள் விருப்ப ஓய்வின் படி வெளியேறினால் கணிசமாக பணம் கிடைக்கும் என்கிற போதிலும், இதுபோன்ற சூழலில் கண்டிப்பாக அவர்களுக்கு மாற்று வேலைகளை அரசு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நான்கு தலைமுறையாக மாஞ்சோலையில் பிறந்து வளர்ந்து இயற்கையோடு வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறும் போதுஇ சொந்தமாக தங்க அவர்களுக்கென்று வேறு எங்கும் நிலமோ, வீடோ நிச்சயம் இருக்க வாய்ப்பு இல்லை. இதை விட்டால் வேறு வேலையும் தெரியாத அவர்களுக்கு மாற்று வாய்ப்புகளை அரசு தருவது தான் சிறந்தது என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications