இசக்கி சுப்பையாவுக்கு டஃப் தரும் திமுக; அம்பாசமுத்திரத்தில் களமிறங்கும் முயற்சியில் அஜய் படையப்பா..!
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் திமுக வேட்பாளர் தேர்வை நடத்தியுள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்டம் உட்பட பல சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய இயற்கை எழில் கொஞ்சும் தொகுதியான அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா களம் காண்பார் எனத் தெரிகிறது. அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் பலமான வேட்பாளரை அங்கு நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளர் நேர்காணலில் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதில் தொழிலதிபரும், சிவகிரி ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவருமான அஜய் படையப்பா சேதுபதியும் கலந்துகொண்டார்.
அஜய் படையப்பா சேதுபதியை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் அம்பாசமுத்திரம் பகுதியில் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். குறிப்பாக தனது சொந்த நிதியின் மூலம் இவர் செய்து கொடுத்துள்ள மருத்துவக் காப்பீடு திட்டம் அங்கு பெருமளவில் பேசு பொருளாக உள்ளதுடன் இக்கட்டான சூழலில் ஒரு சிலர் அதன் மூலம் பயனும் அடைந்துள்ளனர்.
திமுக ராமருக்கு எதிரானது இல்லை.. உதயநிதி போட்டியிடவில்லை என்பது தவறான தகவல்.. ஆர்எஸ் பாரதி பேச்சு
இதைத்தவிர்த்து இஸ்லாமிய ஜமாத் அமைப்புகள், கிறிஸ்துவ அமைப்புகள் என பல தரப்பட்டோரையும் அழைத்து சமத்துவப் பொங்கல் விழா நடத்தி 20,000 பேருக்கு புத்தாடைகள் அளித்து அசத்தினார். இதனிடையே அம்பாசமுத்திரம் தொகுதியை பொறுத்தவரை நேரடியாக திமுகவே களம் இறங்குவதால் அங்கு வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் இருவர் மட்டுமே.
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் அஜய் படையப்பா சேதுபதி ஆகிய இருவரில் ஒருவருக்கு திமுக தலைமை அங்கு வாய்ப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அங்கு களம் காண்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.