நெல்லை அமமுக வேட்பாளர் வேட்புமனுவில் குளறுபடி... டிடிவியின் வியூகத்தை வீழ்த்திய நயினார் தரப்பு..!
நெல்லை: நெல்லை அமமுக வேட்பாளர் பால் கண்ணனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் உள்ளூர் கட்சியினருக்கும் கூட்டணிக் கட்சியினரான எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நெல்லை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக பால் கண்ணன் என்ற பாலமுருகனை வேட்பாளராக நிறுத்தியிருந்தார் டிடிவி தினகரன். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கிடைக்கும் அதிமுக வாக்குகளை பிரித்து அவருக்கு டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பால் கண்ணனின் வேட்பு மனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது.
அமமுக வேட்பாளர் பால்கண்ணனின் வேட்புமனுவில் குளறுபடிகள் உள்ளதாக நயினார் தரப்பு அளித்த புகாரின் அடிப்படையிலேயே வேட்புமனு ஏற்க மறுக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்த பால் கண்ணன் ஒரு காலத்தில் அதிமுகவில் நயினார் நாகேந்திரனின் அரசியல் சிஷ்யர் என்பதும் அவருடன் ஒன்றாக பயணித்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணனிடம் தோல்வியை தழுவிய நயினார் நாகேந்திரன், அதிமுகவில் எழுந்த உட்கட்சி பிரச்சனையால் அங்கிருந்து வெளியேறி பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதனிடையே வரும் தேர்தலில் வெற்றி என்ற ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு அதற்கேற்ற அரசியல் வியூகங்களை அமைத்து வருகிறார்.
பால் கண்ணன் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சமுதாய வாக்குகள் அனைத்தும் அமமுகவிற்கு கிடைக்கும் என எதிர்பார்த்து டிடிவி தினகரன் சீட் வழங்கிய நிலையில், வேட்பு மனு ரூபத்தில் அவருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது நயினார் தரப்பு.