கூலிப்படையை ஏவி கணவன் கொலை.. வழிப்பறி நாடகமாடிய மனைவி.. சங்கரன்கோவிலில் பயங்கரம்
தென்காசி: சங்கரன்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்துவிட்டு வழிப்பறி நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரவசாமி (33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துமாரி (29) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
கணவன், மனைவி இருவரும் அவர்களின் ஊருக்கு சற்று தொலைவில் இருக்கும் வீரசிகாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்ற இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் இரவு தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சேந்தமரம் கிராமம் அருகே வந்த போது அங்கு காரில் வந்து அவர்களை வழிமறித்த மர்மநபர்கள் முத்துமாரியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை தடுத்த வைரவசாமிக்கும், அந்த கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரும்புக் கம்பியை கொண்டு வைரவசாமியை அந்த கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பிறகு நகையுடன் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றுவிட்டது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சேர்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் வைரவசாமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மனைவி முத்துமாரியிடம் போலீஸார் விசாரித்தனர். இதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை முத்துமாரி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவன் வைரவசாமியை கூலிப்படையை ஏவி, தான் கொலை செய்ததை முத்துமாரி ஒப்புக் கொண்டார். இதையடுத்து, முத்துமாரியை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சங்கரன்கோவிலை சேர்ந்த இசக்கி என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக கணவனை கூலிப்படை ஏவி முத்துமாரி கொலை செய்தார்; சொத்துக்காக கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.