150 ஆடுகள்.. கொட்டகையில் அர்த்த ராத்திரியில் கொடுமை.. ஆட்டோவில் விநோத சத்தம்.. யார்னு பாருங்க
திருவள்ளூர்: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமான ஆடுகள் திருடு போயுள்ள சம்பவம், விவசாயிகளை கலக்கமடைய செய்து வருகிறது.
சமீப காலமாகவே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கால்நடைகள் திருட்டு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.. ஆடுகளை மட்டும் குறி வைத்து நடக்கும் திருட்டுகளின் எண்ணிக்கைகள் பெருகி கொண்டே வருகிறதாம்.

விவசாயம் பொய்த்து போவதால், எத்தனையோ விவசாயிகள், தங்கள் கால்நடைகளை நம்பியே வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள்.. அப்படியிருக்கும்போது, இந்த ஆடுகளையும் குறி வைத்து திருடி சென்று விடுவதால், கண்ணீருடன் போலீசில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறார்கள்.
ஆடுகள் திருட்டு: பெரும்பாலும், கார்களில் வந்து ஆடுகளை மர்மநபர்கள் திருடி செல்கிறார்கள்ளாம்.. எந்தெந்த பகுதியில் ஆடுகள் உள்ளன? எவ்வளவு ஆடுகள் இருக்கின்றன? எங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன? என்ற விவரங்களையும் முன்கூட்டியே வந்து மர்மநபர்கள் நோட்டமிட்டு, சமயம்பார்த்து, நள்ளிரவில் காரை கொண்டு வந்து, அதில் ஆடுகளை அள்ளிப்போட்டுக் கொண்டு போய்விடுகிறார்கள்..
இந்த ஆடுகளை தூக்க வரும்போது அவைகள் கூச்சலிட்டுவிடும் என்பதற்காக, ஆடுகளின் வாயில் பிளாஸ்திரி ஒட்டிவிட்டு, திருடுகிறார்களாம். 2 நாட்களுக்கு முன்புகூட, பட்டியில் கட்டப்பட்டிருந்த 150 ஆடுகளை திருடியிருக்கிறார்கள்.. ராமநாதபுரம் மாவட்டம், வந்தியேந்தல் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதிகளில் ஆடு கிடை போடும் தொழில் செய்து வருகிறார்.. 20 வருடங்களாகவே இந்த தொழில் செய்யும் சேகர், சொந்தமாக 150 செம்மறி ஆடுகள் வைத்திருக்கிறார்.
பின்னையூர்: இதற்காக, ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தில் மனைவியுடன் தங்கியிருந்தபடி விவசாயிகளின் விளைநிலங்களில் செம்மறி ஆடுகளை கிடை போட்டுள்ளார்.. இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு விடும் அந்த வயலிலேயே, பட்டி அமைத்து ஆடுகளை அடைத்துவிட்டு சேகர் தூங்குவது வழக்கமாம்.
கடந்த 2-ம் தேதி பின்னையூரில் விவசாயி ஒருவரின் வயலில் பகல் நேரத்தில் கிடை போட்ட சேகர், இரவு பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு அங்கேயே படுத்து தூங்கியிருக்கிறார். அவருடைய வளர்ப்பு நாய் ஒன்றும் அவருடன் துணைக்கு இருந்துள்ளது. அன்றைய தினம் நள்ளிரவு மர்ம கும்பல் பட்டிக்கு வந்தபோது, நாய் குரைத்திருக்கிறது. உடனே கண்விழித்த சேகர், மர்ம கும்பலிடம் நீங்கள் யார்? என்று விசாரித்திருக்கிறார்
லோடு வேன்: ஆனால், அந்த கும்பல் சேகரையும், நாயையும் தாக்கிவிட்டு, பட்டியில் அடைக்கபட்டிருந்த 150 ஆடுகளை லோடு வேனில் ஏற்றிக்கொண்டு பறந்துள்ளது. மறுநாள்தான் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடக்கும் சேகரை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லோடு வேனில் ஏற்றிச்சென்ற ஆடுகளின் மதிப்பு 10 லட்சம் ரூபாயாம். ஆனால், அந்த திருட்டு கும்பல் யார் என்று தெரியவில்லை. போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கோடுவெளி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவரிடமும் நேற்று ஆடு திருடப்பட்டுள்ளது.. இவர் 15க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
ஊருக்கு வெளிபுறம் பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார்.. அப்போது திடீர்னு ஆட்டோவில் வந்த 2 பேர், 15 ஆடுகளில் ஒரு ஆட்டை மட்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துள்ளனர். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் 2 திருடர்களையும் மடக்கி பிடித்து வெங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் வீட்டு கொட்டகையிலிருந்தும் நேற்று 16 வெள்ளாடுகள் காணாமல் போயிருக்கின்றன.. உடனே இதுகுறித்து போலீசார் விசாரணை கொண்டபோது, காணாமல் போன மணிக்கு சொந்தமான ஆடுகள், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஆட்டு சந்தையில் விற்பனைக்கு உள்ளது தெரியவந்தது.
உடனே அங்கு விரைந்த போலீசார், 16 ஆடுகளையும் மீட்டு, ஆடு திருடிய 2 பேரையும் கைது செய்தனர்.. சமீப காலமாகவே, ஆடுகள் திருட்டு போவதும், மாயமாவதும், கால்நடை விவசாயிகளை கலங்கடித்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications