வெறும் 13 மி.மீ.. கற்பக விருட்சத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் விநாயகர்.. டிகே பரணியின் கைவண்ணம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக 13 மில்லி மீட்டர் உயரமுள்ள விநாயகர் சிற்பத்தை டி.கே. பரணி உருவாக்கியுள்ளார்.
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தன மர சிற்பக் கலைஞர் டிகே பரணி (51) வித்தியாசமான விநாயகர் சிலைகளை சந்தன கட்டையால் செய்வது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஆண்டு சிறிய அளவிலான விநாயகர் சிலையை செய்துள்ளார். இந்த சிலை 11 அடி அங்குல உயரமும், 7 அடி அங்குல அகலமும் 3 அடி தடிமனில் அற்புதமான சிலையை உருவாக்கியிருந்தார்.

யானை தாங்கி
தாமரை மலரை யானை தாங்கி நிற்க அதன்மேல் நின்று விநாயகர் நடனமாடுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையைச் சுற்றி விநாயகரின் வாகனமான எலிகள் இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைப்பது போன்று சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதை செய்ய அவருக்கு 3 மாதங்கள் பிடித்தன.

வித்தியாசமான சிலை
அது போல் இந்த முறையும் வித்தியாசமான சிலையை பரணி செய்துள்ளார். இதுகுறித்து அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் நான் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியைச் சேர்ந்த டி.கே. பரணி. நான் சந்தன மர நுண்சிற்பக் கலைஞர். மேலும் அரிசியில் நுண்சிற்பங்களை செதுக்கும் கலைஞன்.

என் குடும்பத்தினர் ஆர்வம்
எங்கள் தாத்தா காலம் முதல் இந்த நுண்சிற்பக் கலையைச் செய்து வருகிறோம். தாத்தா..அதன் பின்னர் எனது தந்தை, அண்ணன், தற்போது நான் என வழிவழியாக சந்தன மரச்சிற்பங்களைச் செதுக்கி வருகிறோம். தற்போது எனது மகன், மகளும் இந்தக் கலையைச் செய்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் விருது
இதற்காக மாநில விருதுகள் முதல் குடியரசுத் தலைவர் விருது வரை பெற்றுள்ளோம். தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக 13 மில்லிமீட்டர் உயரமுள்ள விநாயகர் நுண் சிற்பத்தை உருவாக்கியுள்ளேன். இதில் 2 மில்லிமீட்டர் உயரமுள்ள மூஞ்சூரு வாகனமும் இடம்பெற்றுள்ளது.

கற்பக விருட்சம்
விநாயகரை கற்பக விருட்சத்தின் அடியில் அமரவைத்து இதை கற்பக விருட்ச விநாயகராக உருவாக்கியுள்ளேன். எனது 2 மாத உழைப்பில் இந்த சிற்பம் உருவாகியுள்ளது. இந்த நுண் சிற்பம் விடிஐ (விக்டோரியோ டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்) உள்ளிட்ட பல்வேறு விற்பனையகங்களில் காட்சிக்காக வைக்கப்படவுள்ளது.

பத்ம விருதுகள்
எங்களைப் போன்ற சிற்பக் கலைஞர்களுக்கும் மாநில அரசுகள் வழங்கும் கலைமாமணி, மத்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று நுண்சிற்பக் கலைஞர்கள் சார்பில் அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் சந்தன மரத்தில் சிற்பம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் சந்தன மரக்கட்டைகளை மானிய விலையில் தங்கு தடையின்றி வழங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என பரணி கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications