விநாயகர் சிலையை கரைக்க கிருஷ்ணா நதிநீர் இணைப்புக்கு சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர்: விநாயகர் சிலை கரைப்பதற்கு சென்ற இரு மாணவர்கள் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை சிறுகடல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ஷ்யாம் விக்னேஷ் (13). இவர் 8 -ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் மோனிஷ் (12). இவர் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக ஷ்யாமும் மோனிஷும் நேற்று மாலை விநாயகர் சிலையை கரைப்பதற்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்ணா நதி நீர் இணைப்பு கால்வாய் அருகே சென்றுள்ளனர்.

கால்வாயில் தூக்கி வீச
விநாயகர் சிலையை தூக்கி கால்வாயில் வீசுவதற்கு பதிலாக கால்வாயில் கரைப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது நிலைதடுமாறி கால்வாயில் விழுந்த இருவரும் தண்ணீரில் அடித்துச் சென்று விட்டனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் அடித்துச் செல்வதை பார்த்த அலறி கூச்சலிட்டனர்.

கிராம மக்கள்
அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் சிறுவர்களை தேடினர். ஆனால் 2 பேரும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தீயணைப்புத் துறை மற்றும் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மாணவர்களையும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

செம்பரம்பாக்கம் ஏரி
இரவு வெகுநேரமாகியும் கிடைக்காததால் பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்ட பின்னர், சிறுகடல் பகுதியில் இன்று காலை மாணவர்களின் உடல்களை சடலமாக மீட்டனர். இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் இரண்டு மாணவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

குடிநீர் ஆதாரம்
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு செல்லும் கால்வாயில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ குழந்தைகளுடன் யாரும் போகக் கூடாது என மாவட்ட நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியிருந்தனர்.

விநாயகர் சிலை
எனினும் கிருஷ்ணா கால்வாயில் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விநாயகர் சிலையை கரைப்பதற்காக கால்வாயில் இறங்கிய இரு மாணவர்களும் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications