திருவள்ளூர் ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை, மூலிகை சாறு வைத்தியம்.. கல்லூரி மாணவி தற்கொலை.. நடந்தது என்ன?
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி அருகே உள்ள ஆசிரமத்தில் 20 வயது கல்லூரி மாணவி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூண்டி அருகே வெள்ளத்துகோட்டை என்ற பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் முனுசாமி. இங்கு பூஜைகள் செய்து மூலிகை சாறுகள் மூலம் நாள்பட்ட நோய்களை முனுசாமி குணப்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு தீராத வயிற்று வலி மற்றும் கழுத்து வலியுடன் வந்தார் 20 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவரை ஆசிரமத்தில் வைத்து சிகிச்சை கொடுப்பதாக முனுசாமி கூறியதாக தெரிகிறது. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேல் அந்த மாணவி ஆசிரமத்தில் தங்கி வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கால் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதால் அந்த மாணவியை அங்கேயே தங்க வைத்து முனுசாமி சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அவரது அத்தையும் அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அந்த மாணவி வாந்தி எடுத்தார்.

வாந்தி எடுத்த மாணவி
இதனால் பதறிய அவரது அத்தை முனுசாமியிடம் விஷயத்தை கூறி அந்த மாணவியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றார். இதையடுத்து நீண்ட நேரம் கழித்து முனுசாமி ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்துள்ளார். அந்த ஆட்டோவில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

பூச்சிமருந்து குடித்த மாணவி
அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது அவர் பூச்சிமருந்து குடித்துள்ளார் என்பது! இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சாவில் மர்மம் என புகார்
தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் 2020 ஆம் ஆண்டு உடல்நல பிரச்சினைக்காக எங்கள் மகளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்தோம். அங்கு அவரை ஆசிரமத்தில் தங்க வைத்துதான் சிகிச்சை மேற்கொள்ள முடியும் என முனுசாமி தெரிவித்தார்.

உடல்நல பிரச்சினை
மகளின் உடல்நல பிரச்சினை தீர வேண்டும் என்பதாலும் மகளுக்கு ஆன்லைன் வகுப்பு என்பதாலும் அந்த ஆசிரமத்தில் மகளை தங்க அனுமதித்தோம். ஆனால் அண்மையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அப்போது எங்கள் மகளை அழைத்து செல்ல ஆசிரமம் சென்றபோது முனுசாமி ஏதேதோ காரணங்களை கூறி அனுப்ப மறுத்தவிட்டார்.

நள்ளிரவு பூஜைகள்
மேலும் எங்கள் மகளுக்கு தோஷம் இருப்பதாக கூறிய முனுசாமி அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பூஜை செய்வார். அந்த பூஜையில் நள்ளிரவில் எங்களது மகளை கட்டாயமாக கலந்து கொள்ள வைப்பார் என்றனர். திருமணம் கைக்கூட வேண்டும் என்பதற்காக நிறைய பெண்கள் இந்த ஆசிரமத்திற்கு வருகை தந்து முனுசாமியிடம் ஆசி பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் சிலரை இரவு நேர பூஜைக்காக முனுசாமி அங்கேயே தங்க வைத்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் முனுசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்குள்ள மற்றவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications