வீட்டை விட்டு ஓடி வந்து காதல் திருமணம் செய்த ஜோடி.. ஒரே மாதத்தில் தாங்க முடியாத சோகம்
திருவள்ளூர்: வீட்டை விட்டு ஓடி வந்து காதல் திருமணம் செய்த ஜோடி, வாழ்வில் ஒரே மாதத்தில் மோசமான இழப்பை சந்தித்துள்ளது. காதல் திருமணம் செய்த யுவசங்கர், சொந்த ஊருக்கு காதல் மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.
காதல் திருமணம் செய்தவர்கள் பொதுவாக பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்வார்கள். அப்படி திருமணம் செய்தவர்களுக்கு பெரியஅளவில் ஆதரவு இருக்காது. அந்த சூழலில் ஏதேனும் எதிர்பாராத சூழலில் மனைவியோ கணவனோ இறக்க நேரிட்டால், அதைவிட மோசமான விஷயம் அவர்களுக்கு இருக்காது. அப்படியான துயரத்தை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நவீனா சந்தித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த 22 வயதாகும் யுவசங்கரும், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் நவீனாவும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த மாதம் யுவசங்கரும், நவீனாவும் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் தங்க இடம் வேண்டும், வேலை வேண்டும் என்பதால், அதற்காக ஆன்லைனில் தேடி உள்ளனர். இணையத்தளத்தில் வெளியான வேலைவாய்ப்பு மூலம் திருவாலங்காடு ஒன்றியம் பரேஸ்புரம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான முயல் பண்ணையில் கடந்த மாதம் 20-ந் தேதி வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். யுவசங்கர் நவீனா தம்பதி முயல் பண்ணையில் தங்கி பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக யுவசங்கர் தனது மனைவி நவீனாவுடன் புறப்பட்டுள்ளார். அவர்களது வீட்டின் பின்புறமாக பேருந்து நிலையத்தை நோக்கி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது முயல்பண்ணை அருகே அமைந்துள்ள தரை கிணற்றில் கால் தவறி யுவசங்கர் விழுந்துவிட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி நவீனா அழுது கொண்டே ஓடி வந்து முயல் பண்ணை உரிமையாளர் கோபியிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து கோபி திருத்தணி தீயணைப்புத் துறையினர் மற்றும் திருவாலங்காடு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கிணற்றில் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் யுவசங்கர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து, எப்படி இறந்தார், தவறி விழுந்தாரா, வேறு ஏதுவும் நடந்ததா என்பது தீவிர விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் வாலிபர் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் திருவாலங்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications