"அண்ணாமலையுடன் இருப்பது நிகிதா அல்ல.. அது நான்தான்" பாஜக நிர்வாகி ராஜினி கொடுத்த பரபரப்பு புகார்!
திருவள்ளூர்: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இருப்பது அஜித் குமார் வழக்கில் தேடப்பட்டு வரும் மோசடி ராணி நிகிதா அல்ல, அது தாம்தான் என்று பாஜகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி தெரிவித்துள்ளார். வழக்கின் விசாரணையை திசை திருப்புவதற்காகவும், அண்ணாமலை மீது அவதூறு பரப்புவதற்காகவும் சிலர் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பரப்புவதாக தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் கொடூரமான தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார். மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். ஜூன் 28ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் காரின் சாவியை அஜித் குமாரிடம் கொடுத்து பார்க் செய்ய கூறியுள்ளனர்.

அஜித் குமார் மரணம்
ஆனால் அஜித் குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதால், வேறொரு நபரின் உதவியுடன் காரினை பார்க் செய்துவிட்டு சாவியை நிகிதாவிடம் கொடுத்துள்ளார். இதன்பின் காரில் இருந்த 9 சவரன் நகையை காணவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு அஜித் குமார் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிய நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்தில் நகை திருடு போனதாக புகார் அளித்திருக்கிறார்.
யார் இந்த நிகிதா?
இந்த திருட்டு வழக்கின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார், காவலர்களின் கொடூரமான சித்ரவதை காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பின் நிகிதா மீது பல்வேறு பண மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2011ஆம் ஆண்டிலேயே துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று குறி, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.
மோசடி ராணி நிகிதா
இந்த பணத்தை திருப்பி கேட்டதற்கு நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் மிரட்டல் விடுத்ததோடு, குடும்பத்துடன் தலைமறைவாகி இருக்கின்றனர். இதேபோல் நிகிதா தொடர்ச்சியாக திருமண மோசடியிலும் ஈடுபட்டதாக ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் குற்றம்சாட்டி இருக்கிறார். இவர்களின் குடும்பமே ஒரு சீட்டிங் குடும்பம் என்றும் தெரிவித்திருந்தார்.
பாஜக ஆதரவாளர் நிகிதா
இதனிடையே நிகிதாவின் சோசியல் மீடியா பக்கத்தின் மூலமாக அவர் ஒரு பாஜக ஆதரவாளர் என்று தெரிய வந்தது. மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் பங்கேற்ற புகைப்படங்களை நிகிதா வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா இருந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜினி புகார்
இந்த நிலையில் அண்ணாமலையுடன் நிகிதா இருக்கும் புகைப்படம் குறித்த உண்மை வெளியாகி இருக்கிறது. அதன்படி, அண்ணாமலையுடன் இருப்பது மோசடி ராணி நிகிதா அல்ல என்றும், பாஜகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ராஜினி பேசுகையில், அஜித் குமார் கொலை வழக்கின் விசாரணையை திசைதிருப்புவதற்காகவே அந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?
அந்த புகைப்படம் அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான். அண்ணாமலை மீது அவதூறு பரப்புவதற்காகவும், எனக்கு மன உளைச்சல் கொடுப்பதற்காகவும், பாஜகவை களங்கப்படுத்தவும் பகிரப்பட்டு வருகிறது. இதனால் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications