திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு.. திருவள்ளூரில் அடுத்தடுத்து சம்பவம்.. அதிரவைத்த 4 பேர்!
திருவள்ளூர்: சோழவரத்தில் திமுக பிரமுகர் ஜெகன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒருவர் வீட்டில் கார் கண்ணாடிகளை உடைத்ததோடு, லாரி பார்க்கிங் யார்டில் ஓட்டுநரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி உள்ளனர். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி உள்ளனர். இதில் திமுக பிரமுகர் ஜெகனின் இரண்டு கார்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும், சோழவரம் அருகே உள்ள சிறிலியம் என்ற கிராமத்தில் சரண் ராஜ் என்பவரது வீட்டிற்குள் புகுந்து இரண்டு கார்களின் கண்ணாடிகளையும் இந்த மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

மேலும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லாரி யார்டு ஒன்றில் இந்த மர்ம நபர்கள் வெடிக்குண்டு வீசியுள்ளனர். அப்போது இந்த வெடிகுண்டு சத்தம் கேட்டு லாரி ஓட்டுநர் சிவா என்பவர் வெளியில் வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிவாவை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். இந்த சமூக விரோத செயல்களை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவங்களைச் செய்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது சம்பவமும், ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவமும், இரண்டு கார்கள் உடைக்கப்பட்ட சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக இந்த கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications