ஆஹா.. பள்ளி மாணவர்களோடு மாணவர்களாக பெஞ்சில் அமர்ந்துள்ளது யாரு பாருங்க.. நம்ம முதல்வர்!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வகுப்பறை, கழிவறை மற்றும் சமையலறையில் ஆய்வு மேற்கொண்டார்.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொலி, கைப்பேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிட்டு ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், மாணவர்களுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

எண்ணும் எழுத்தும் திட்டம்
1,2ஆம் வகுப்புகள் படிக்காமலேயே ஆல் பாஸ் மூலம் 3ஆம் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் இருக்கின்றனர். எனவே 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக 'எண்ணும், எழுத்தும்' திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம்.

மாணவரோடு மாணவராக...
இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை திரும்பியபோது வடகரை பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பு சென்ற மு.க.ஸ்டாலின், மாணவர்களோடு மாணவர்களாக 4ஆவது பெஞ்சில் அமர்ந்து, தமிழ் பாடம் தானே நடத்துகிறீர்கள். நடத்துங்கள் என்று கூறி பாடத்தை கவனித்தார். பின்னர் தமிழ் ஆசிரியை இலக்கண பாடத்தை நடத்தத் தொடங்கிய போது, அருகே அமந்திருந்த மாணவரின் புத்தகத்தை வாங்கி முதலமைச்சர் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.

கைகளை கட்டி அமர்ந்த அமைச்சர்
இதனிடையே முதலமைச்சருக்கு பின் 5ஆவது பெஞ்சில் அமர்ந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ் ஆசிரியை நடத்தும் பாடத்தை கைகளை கட்டிக்கொண்டு கவனித்தார். முதலமைச்சருடன் வகுப்பில் அமர்ந்திருப்பதை நம்ப முடியாமல், மாணவர்கள் அதிர்ச்சியில் அவரை திரும்பிப் பார்த்துக் கொண்டே பாடத்தை கவனித்த சம்பவமும் அங்கு நடந்தேறியது.

கழிவறை வரை நீண்ட ஆய்வு
இதன்பின்னர் வகுப்பறையில் இருந்து கிளம்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை சுகாதாரமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தார். அதேபோல் மாணவர்களுக்காக சத்துணவு சமைக்கப்படும் சமையல் அறையையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோதனை செய்தார்.












Click it and Unblock the Notifications