இன்று முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு.. மாணவ, மாணவிகளோடு அமர்ந்து சாப்பிட்ட ஸ்டாலின்!
திருவள்ளூர்: முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்தநாளான இன்று அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் பொது மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 14,40,351 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.

பல்வேறு ஆய்வுகளின் மூலமும், தமிழ்நாடு மாநில திட்டக் குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்புப் பெற்றுள்ளதோடு, சத்தான உணவினை வழங்குவதன் காரணமாக பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகையும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
ஸ்டாலின் பெருமிதம்: வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதை கண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருவதாக திட்டக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்தச் சூழலில், பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கும் இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்திடுவோம் என அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்: கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டத்தில், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்: பள்ளிக் குழந்தைகளுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறியதோடு, அவர்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். மாணவர்களுக்கு ஊட்டி விட்டு, சர்க்கரை பொங்கல் எப்படி இருக்கிறது என அன்போடு விசாரித்தார்.
மேலும், தமிழக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்கின்றனர்.
இதன் மூலம் மொத்தமுள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் இந்த காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications