தலைவர் நாற்காலியில் அமர்ந்து கூட்டம் நடத்திய திமுக சேர்மன்! ஸ்ரீபெரும்புதூரில் போராடும் காங்கிரஸ்!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க உள்ளூர் திமுகவினர் முன்வராததால் அண்ணா அறிவாலயம் வரை பஞ்சாயத்து சென்றுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றிபெற்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாகியுள்ளது.
ராஜீவ்காந்தி மறைந்த மண் என்பதால் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை காங்கிரஸ் கட்சியினர் செண்டிமெண்டாக கருதுவது இங்கு கவனிக்கத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.

பதவி ராஜினாமா
ஆனால் அங்கு தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பாத திமுகவினர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக நகர செயலாளர் மனைவியை போட்டியிட செய்து வெற்றி பெற செய்தனர். இதனிடையே தலைமையின் உத்தரவை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்து தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

பின்னணியில் யார்?
இதையேற்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கூட்டணிக்கட்சிக்கு விட்டுக்கொடுத்தனர். ஆனால் ஸ்ரீபெரும்புதூரிலோ நீயா நானா என்கிற அளவுக்கு முட்டல் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக நகரச் செயலாளரின் பின்னணியில் ஒரு சில முக்கிய நிர்வாகிகள் இருந்து இயக்குவதாக காங்கிரஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தலைவர் நாற்காலி
திமுக தலைமை பதவி விலகக் கோரியும் பேரூராட்சி தலைவர் நாற்காலியில் அமர்ந்த தலைவர் சாந்தி தனது ஆதரவு கவுன்சிலர்களை அழைத்து கூட்டத்தை நடத்தியுள்ளார். இதனிடையே காங்கிரஸ் கட்சியினர் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருவதால், இந்த விவகாரம் திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications