Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டுக்கு ஒரு ரூபாய் தரவில்லை? அடித்துப் பேசும் ஒரு எம்.ஏல்.ஏ! தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: சட்டமன்ற உறுப்பினராக வந்தது பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் மக்கள் சேவை செய்வதற்காகத்தான் வந்தேன் என்றும் ஆகவே தேர்தலில் போட்டியிட்ட போது ஓட்டு வாங்குவதற்காக ஒரு ரூபாயைக் கூட வாக்காளர்களுக்குத் தான் வழங்கவில்லை என்றும் தைரியமாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஒரு சட்டமன்ற உறுப்பினர்.

தேர்தல் என்றாலே அதற்குப் பல ஃபார்முலாக்கள் இருப்பதாக ஊடகங்களில் அடிக்கடி சொல்லப்படுகிறது. திருமங்கலம் ஃபார்முலா தொடங்கி ஈரோடு கிழக்கு வரை அதைப் பார்த்திருக்கிறோம். மக்கள் மந்தைகளாக ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுத் தேர்தல் வரை சகல சலுகைகளையும் செய்து கொடுத்து வாக்குகளைப் பெற்றதைப் பல அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள்.

tiruvallur ponneri

சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்படி நடந்தது? அங்கே பணம் எந்தளவுக்குப் பாய்ந்தது? என்பது பற்றி நிறையச் செய்திகள் வந்தன. ஆனால், இந்த மாதிரியான கலாச்சாரம் தலைவிரித்தாடும் தமிழ்நாட்டில்தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் நயா பைசா கூட கொடுக்காமல் நான் எம்.எல்.ஏ ஆனேன் எனத் தைரியமாகப் பொதுவெளியில் பேசி இருக்கிறார்.

யார் அவர்? எந்தத் தொகுதி? என்ன கட்சி? இப்படிப் பல கேள்விகள் உடனே பலருக்கும் எழலாம். அவர் யார்? அவர் பேசியது என்ன? "மழை வந்தாலும் சரி அல்லது வெயில் அடித்தாலும் சரி மாதா மாதம் சரியாக ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வங்கிக் கணக்குக்கு அரசு 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வரவு வைக்கப்படுகிறது. அதைப் பெற்றுக் கொண்டு சும்மா இருப்பதற்காக அதைக் கொடுக்கவில்லை. மக்களின் குறை என்ன? தேவை என்ன? என்பதை அறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் வேலை" என்கிறார் சென்னையை அடுத்துள்ள பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர்.

கடந்த 2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு 94,528 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார் இவர். 1967க்கு பிறகு திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆண்டு வந்த இந்தத் தொகுதியில் 1962க்கு அப்புறம் மீண்டும் காங்கிரசின் வெற்றிக் கொடியே ஏற்றியவர். குறிப்பாகச் சொல்லப் போனால் எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கியதிலிருந்து அதிமுகவின் கோட்டை இந்தத் தொகுதி.

"சென்னை தியாகராயர் கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது மாணவர் தேர்தலில் நின்றேன். ஆனால், வெற்றி பெறவில்லை. எனக்கு கிடைத்தது முதல் தோல்வி அதுதான். அடுத்து எம்.எஸ்.சி, தாவரவியல் சேர விண்ணப்பம் போட்டேன். கூடவே அரசியல் அறிவியலுக்கும் விண்ணப்பித்தேன். இரண்டுக்கும் சீட்டு கிடைக்கும். எதைப் படிக்கலாம் என யோசித்த போது அரசியல் அறிவியல் சேர்ந்தேன். மாநிலக் கல்லூரி மாணவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அப்போதுதான் ஒரு அரசியல்வாதிக்காக அனுபவம் கிடைத்தது. பின்னர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தேன். முடித்த பின் முறையாக வழக்கறிஞராகப் பயிற்சியும் எடுத்தேன்.

கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் நின்று வெற்றிபெற்றேன். ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவரானேன். 5 வருடங்கள் ஆட்சிக்காலம் முடிந்ததும் மீண்டும் வழக்கறிஞர் தொழிலுக்குச் சென்றேன். ஏனென்றால், முழு நேர அரசியலால் எனப் பொருளாதார நிலை முடங்கியது. அரசியல் பணி என்பது சேவைக்கானது. அதை வைத்து பணம் சம்பாதிப்பது தவறு. எனவே மீண்டும் வருமானம் வேண்டி வழக்கறிஞர் பணியைச் செய்யத் தொடங்கினேன்.

என் குடும்பத்திற்கு என்ன தேவையோ அந்தளவுக்கு வக்கீல் தொழில் செய்து 5 ஆண்டுகளில் பணம் சம்பாதித்தேன். அப்போதுதான் மனதில் ஒரு தைரியம் வந்தது. எனக்கு உள்ளாட்சித் தேர்தலில் கட்சியே வலுக்கட்டாயமாகச் சீட்டுக் கொடுத்தது. நான் அப்போது தேர்தலில் நிற்க மறுத்தேன். ஆனால், 2021இல் நானே போய் சட்டமன்ற உறுப்பினருக்குச் சீட்டு கேட்டேன்.

tiruvallur ponneri

இது அதிமுக கோட்டை என்பதால் வெற்றி பெறவே முடியாது என்றார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்கள். நான் ஒரு ஓட்டுக்குக் கூட காசு கொடுக்கவில்லை. பலரும் ஓட்டுக்குக் காசு கொடுக்காமல் எப்படி ஜெயிக்க முடியும் என்றார்கள். நான் பணம் கொடுக்காமல்தான் வெற்றி பெற்றேன். அதில் பலருக்கும் ஆச்சரியம். காமராஜர் பெயரைச் சொல்லிக் கொண்டு என்னால் எப்படி வாக்குக்குப் பணம் கொடுக்க முடியும்?

கடைசி வரை பணம் கொடுத்து ஓட்டு வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக நின்றேன். மக்களும் என்னிடம் நயா பைசா வாங்காமல் என்ன சட்டமன்ற உறுப்பினராக்கி இருக்கிறார்கள். என் தொகுதியில் உள்ள அனைவரிடம் என் செல்போன் நம்பர் இருக்கிறது. உதவிக் கேட்டு வரும் அனைவரையும் சந்தித்து நான் குறைகளைத் தீர்ப்பேன். நேரடியாகத் தினமும் எந்தப் பகுதியில் பிரச்சினை, குறைகள் உள்ளதோ அங்கே காலை அல்லது மாலையில் போய் நிற்பேன். காரணம், என்னை நம்பி ஒரு ரூபாய் பெறாமல் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் உண்மையாக இருக்கவேண்டும்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+