திருத்தணி அருகே லாரி- கார் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து.. சென்னை கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி
திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ள சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் காரும் மோதியதில் மிக மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் மோசமாகக் காயமடைந்த நிலையில், அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நமது நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அப்பாவி மக்கள் உயிர் போவதும் தொடர்கதையாகி வருகிறது. விபத்துகளைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் விபத்து தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

அப்படியொரு மோசமான விபத்து தான் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடந்துள்ளது. இதில் கல்லூரியில் படிக்கும் 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்து: திருத்தணி அடுத்துள்ள கனகம்மாசத்திரம் என்ற பகுதியின் அருகே ராமஞ்சேரி கிராமம் அருகே லாரியும் - காரும் இன்று மாலை நேருக்கு நேர் மோதியதில் மிக மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். பலத்த காயமடைந்த இருவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமஞ்சேரியில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அங்கே இன்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்புறம் கார் ஒன்று வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.

மொத்தம் ஏழு மாணவர்கள்: இந்த கொடூரமான விபத்தில் காரில் இருந்த சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் மொத்தம் 7 மாணவர்கள் சென்றுள்ளனர். இந்த கொடூர விபத்தில் அதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.. காரில் இருந்த மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 மாணவர்கள் பலி: இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் 21 வயதே ஆன சேர்த்தன், யுகேஷ், நித்திஷ், நித்திஷ் வர்மா, ராம்கோமன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்கள் சைதன்யா(21),விஷ்ணு(21) என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.
மேலும், இவர்கள் அனைவருமே அனைவருமே ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். இந்த கொடூர விபத்து தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஒரே விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications