தமிழகத்தில் எவ்வளவு முதலீடுகள்..? வெள்ளை அறிக்கை கேட்கும் கே.எஸ்.அழகிரி
திருவள்ளூர்: தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்ட முதலீடுகள் தொடர்பான விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. முதல் மாநாடு ஜெயலலிதா இருந்தபோது கடந்த 2015-ம் ஆண்டும், 2-வது மாநாடு இந்த ஆண்டு ஜனவரி மாதமும் நடைபெற்றது. 2015-ல் நடைபெற்ற மாநாடு மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

இதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதோடு, சுமார் 3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை திரட்டிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் முதலீடு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. சுமார் ஐந்தரை லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை பெற்றுள்ளதாக கூறும் தமிழக அரசு அது தொடர்பான முழு விவரத்தை ஏன் தர மறுக்கிறது என திமுக வினவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த நடுகுத்தகை என்ற ஊரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏற்கனவே நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகள் கிடைத்தன என்பதை பற்றிய வெள்ளை அறிக்கை தேவை எனக் கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அந்தத் தேர்தல் நடைபெறாமல் மத்திய அரசே நினைத்தாலும் தமிழகத்திற்கு நிதியை அளிக்க முடியாது எனவும் கூறினார்.
வங்கிகள் இணைப்புகள் மூலம் பிரதமர் மோடியின் பணக்கார நண்பர்கள் தான் பயன் அடைவார்களே தவிர, நடுத்தர எழை எளிய மக்களுக்கு அது ஒரு பயனையும் அளிக்காது என கே.எஸ்.அழகிரி விமர்சித்தார். மேலும். ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கை பழிவாங்கும் எண்ணத்துடன் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications