விடாமல் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம்! அவசரமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றம்
திருவள்ளூர்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிகாந்த் செந்தில் எம்பிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று 2ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தவாறே 3ஆவது நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கக் கூடும் என்பதால் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ 2,152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் நேற்று முன் தினம் (ஆக.29) முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

திருவள்ளூரில் நேற்று அவர் 2ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தின் போது சசிகாந்த் செந்தில் எம்பிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
ரத்த அழுத்தம் குறைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் 2ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் சசிகாந்த் செந்திலோ அதற்கு மறுத்து, மருத்துவமனையிலேயே உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனாலும் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கக் கூடும் என்பதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.












Click it and Unblock the Notifications