திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணம் சிக்னல் கோளாறு? வெளியான முதல்கட்ட தகவல்
திருவள்ளூர் : கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாகுமதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் அருகே விபத்துக்குள்ளானது. ஏற்கனவே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் மீட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தவறான சிக்னலால் ஏற்பட்ட விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்து இருப்பதாகவும் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளுடன் 'பாக்மதி எஸ்பிரஸ்' ரயில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தின் பெரம்பூரில் இருந்து 7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது.

அப்போது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக பாக்மதி எஸ்பிரஸ் வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் மீது வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
அப்போது பாக்மதி எஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் திடீரென எரிந்தன. பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில், அதில் இருந்த பயணிகளின் உடமைகள் சிதறின. இரவு நேரம் என்பதால் பயணிகளை சிலர் இரவு உணவு முடித்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் விபத்து காரணமாக அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில பயணிகள் ரயிலில் இருந்து திடீரென வெளிய குதித்து தப்ப முயன்றனர்.
தொடர்ந்து காயம் அடைந்த பயணிகள் அலறிய நிலையில் அருகில் வசித்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும் விபத்து குறித்து அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினரும் ரயில்வே துறைநெரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் காயமடைந்த பயணிகளை மீட்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
மேலும் விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து என்டிஆர்எப் வீரர்கள் விரைந்துள்ளனர். 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரயில் விபத்து நடந்த பகுதிக்கு வந்துள்ளனர். மேலும் விபத்து நடந்த பகுதி ஆந்திர மாநிலத்திற்கு அருகில் உள்ள பகுதி என்பதால் அங்கிருந்தும் நிவாரண பணிகளுக்காக மீட்பு படையினர் விரைந்தனர். தொடர்ந்து தீப்பிடித்த பெட்டிகளில் தீ அணைக்கப்பட்டு உள்ளே சென்று அங்கிருந்த பயணிகளை மீட்கும் பணியானது நடைபெற்றது.
மேலும் காயமடைந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அது மட்டும் இல்லாமல் லேசான காயமடைந்த பயணிகளுக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது தர்பங்கா விரைவு வரையில் மோதியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக சராசரியாக 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த சரக்கு ரயில் விபத்து நடந்த 8.27 மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் லூப் லைனில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இந்த விபத்து நேரிட்ட நிலையில் சிக்னல் கோளாறு தான் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து சிக்னல் ஆபரேட்டர் உள்ளிட்டவர்களிடம் தனியாக விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தவறான சிக்னல் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கும் நிலையில் இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் விபத்து நேரிட்ட ரயிலில் பயணம் செய்த பயணிகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற நிம்மதி அளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் காயம் அடைந்தவர்களுக்கு மட்டும் தற்போது சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications