பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்
திருவள்ளூர்: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முகாம் மாதந்தோறும் 2வது செவ்வாய் கிழமைகளில் நடக்கும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அரசின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த திட்டத்தின் நோக்கமானது பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல். பெண் குழந்தைகளை 18 வயதுக்குப் பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல். இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையைப் பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல். பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல். பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல்
ஆகும்.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின்குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
மேற்கூறிய வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தைகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத வேண்டும். இவ்வாறு, முதிர்வுத் தொகையானது பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத் தொடர உதவும். பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட 6வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.1800/- வழங்கப்படுகிறது.
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஜூன் வரை சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதம் 2வது செவ்வாய் கிழமைகளில் நடக்கவுள்ளது. இதில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் பெறப்படும். இதில் பயனடைய, குடும்பத்தில் ஒன்று அல்லது 2 பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்து 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
2 பெண் குழந்தைகள் மட்டும் எனில் 2வது குழந்தை பிறந்து 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 40 வயதிற்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. வருமான சான்று ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் ரூ.50 ஆயிரம் மற்றும் 2 பெண் குழந்தைகள் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் பெயரிலும் ரூ.25 ஆயிரம் தொகை தமிழ்நாடு மின்விசை நிதி (ம) அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, அதற்கான ரசீது நகல் பெண்குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் முன்னதாக பதிவு செய்யப்பட்டு தற்போது 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும். எனவே முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் மேற்காணும் பயன்களை பெற ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 2வது செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், இரண்டாம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரியிலோ, 044 - 29896049 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications