செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு இல்லை.. ஹைகோர்ட்டில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விளக்கம்
சென்னை: பொதுமக்கள் கருத்துக் கேட்கும் கூட்டத்தில் யாரும் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து செல்போன் கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டது
திருவள்ளூரை சேர்ந்த உதயகுமார் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், திருவள்ளூர் மாவட்டம் மோரையை அடுத்த பூரணி நகர் பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் செல்போன் கோபுரம் (டவர்) அமைக்க திட்டமிட்டு வருகிறது.

செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியை சுற்றி ஏராளமான குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசித்து வருவதால் செல்போன் கதிர்வீச்சினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 2022ம் ஆண்டு, செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி வழங்கும் முன் கண்டிப்பாக மொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்தார். ஆனால் கருத்துக்கேட்பு கூட்டத்தை
நடத்தாமல் அமைதி கூட்டத்தை தாசில்தார் நடத்தினார்.
நீதிமன்ற உத்தரவை மீறி கருத்துக் கேட்பை கூட்டம் நடத்தாமல், செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் அரசு பீளிடர் முத்துக்குமார் ஆஜராகி செல்போன் கோபுரம் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்று அந்த கூட்டத்தில் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை, நீதிமன்ற உத்தரவின் வழிகாட்டுதல் படி தான் இந்த செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications