கொரோனாவை விட திமுகவை பார்த்து அரசு அஞ்சுகிறது - கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரவாத கொரோனா கிராம சபை கூட்டங்களால் பரவி விடுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
திருவள்ளூர்: கொரோனாவை விட திமுகவை பார்த்து தான் முதல்வர் பயப்படுகிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரவாத கொரோனா கிராம சபை கூட்டங்களால் பரவி விடுமா என்றும் கேட்டுள்ளார் ஸ்டாலின்.
சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி மற்றும் உழைப்பாளர் தினங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன் படி, காந்தி ஜெயந்தியையொட்டி இன்று ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என அரசு அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு திடீரென கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது.
கிராம சபை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிக்கல் நீடித்ததாகவும் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.
ஏற்கனவே கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவிருந்த கிராம சபை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதும் ரத்தாகியது குழப்பத்தை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். கொரோனா பாதிப்பினாலேயே கூட்டம் ரத்தானதாகவும் அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தெரிவித்தார்.
இந்த நிலையில் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூரில் கிராம சபை கூட்டத்தினை நடத்தினார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
பணம் கொடுக்காமலேயே ஜெயிச்சுட்டு வாங்க- திமுக உத்தரவால் கையை விரிக்கும் மா.செ.க்கள்- நிர்வாகிகள் ஷாக்
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், இது கிராம சபை இல்லை, மக்கள் சபை என்றார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை திமுக போராட்டத்தை கைவிடாது என்றும் தெரிவித்தார்.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரவாத கொரோனா கிராம சபை கூட்டங்களால் பரவி விடுமா? கொரோனாவை விட திமுகவை பார்த்து தான் முதல்வர் பயப்படுகிறார் என்று கூறினார் ஸ்டாலின்.
இதே போல தமிழகத்தில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ள பஞ்சாயத்துகளில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தினை ரத்து செய்ததை கண்டித்து வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.